இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4 ஆயிரம் ஜி.பி.எஸ் கருவிகளை ஆஸ்திரேலிய அரசு வழங்குவது ஏன்?

இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4 ஆயிரம் ஜி.பி.எஸ் கருவிகளை ஆஸ்திரேலிய அரசு வழங்குவது ஏன்?

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரும் இலங்கை மக்களை தடுக்கும் விதமாக இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4,200 ஜி.பி.எஸ் கருவிகளை ஆஸ்திரேலிய அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடற்தொழில் கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்த ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பிலான கருவிகள் சுமார் 4 ஆயிரம் படகுகளுக்கு வழங்கப்படுவதன் மூலம் கண்காணிப்பு மையத்திலிருந்து படகு பயணிக்கும் இடம் கண்காணிக்கப்படும்.

கடல்சார் விழிப்புணர்வு, ஆட்கடத்தல் தடுப்பு, சட்டவிரோத அல்லது அறிவிக்கப்படாத மீன்பிடி செயல்கள், தீவிரவாத செயல்கள் தடுப்பு, குற்ற கும்பல்கள் படகுகளை பயன்படுத்துவதை தவிர்க்க இந்த கண்காணிப்பு அமைப்பு (monitoring system) இலங்கை அரசுக்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கை மீன்வள அமைச்சகம் மீன்பிடி செயல்களை கண்காணிக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் முக்கியத்துவமிக்க கடல் பகுதிகளில் அதிக அளவிலான மீன்பிடி செயல்கள் நிகழ்வதை தடுக்க இந்த கண்காணிப்பு உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் விலைவாசி உயர்வு, பெட்ரோல் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பலர் ஆஸ்திரேலிய கடல் பகுதிக்குள் சென்ற போதிலும் மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இலங்கை பயணத்தின் போது பேசியுள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஓ’நீல்,“ எங்களிடம் உங்களுக்கான ஒரு செய்தி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வராதீர்கள்! நீங்கள் ஆஸ்திரேலியாவுக்குள் வந்தடைய முடியாது. மீறி வந்தால் இடைமறிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவீர்கள்,” எனத் தெரிவித்திருக்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.