அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் ஊழல் மோசடி!!!

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஆட்சி அதிகாரங்கள் ஒரு குறிப்பட்ட குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டு கடந்த 12 வருடகாலமாக அதன் செயற்பாடுகள் யாவும் மழுங்கடிக்கப்பட்டு பாரியளவு ஊழல் மோசடிகளை செய்துவந்தவர்களின் கபடத்தனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்னை மாற்றத்திற்கான முன்னணியின் செயலாளர் அஸ்வர் சாலி தெரிவித்தார்.

 

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நேற்று (25) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு மீனோடைக்கட்டு மாற்றத்திற்கான முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த 12 வருடங்களாக அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகவாபி, திராய்க்கேணி போன்ற பிரதேங்களுக்கு செய்த சேவைகள் என்னவென்று பார்த்தால் அது பூச்சியமாகத்தான் இருக்கின்றது.  55 நபர்களைக் கொண்டு இயங்கிய அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் இன்று 4 நபர்களைக்கொண்டு இயங்கி வருகின்றது. இதுதொடர்பில் எமது பிரதேச மக்கள் மிக ஆழமாக சிந்திக்கவேண்டும்.

 

மர்ஹூம் ஜமால்டீன் அதிபரின் காலத்தில் 55 பேரைக்கொண்டு இயங்கிய சங்கம் இன்று 4 பேராக இயங்கிவரக் காரணம் என்ன? இதுபற்றி அன்று சிந்தித்தார்களா? அவ்வாறு சிந்தித்திருந்தால் அன்றே ஒரு மாற்றத்தை கொண்டுவந்திருக்க முடியும். இன்று பெரியதொரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

 

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், குடும்பத்தின் ஆட்சியாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற சிந்தனையிலேயே அவர்களின் செயற்பாடுகள் இன்றுவரை இருக்கின்றது. மக்கள் நலன் சார்ந்த விடயங்களைப் பற்றியோ, சங்கத்திற்கு இலாபம் ஈட்டுகின்ற செயற்பாடுகளைப் பற்றியோ ஒருநாளும் சிந்தித்ததும் இல்லை, சிந்திக்கப்போவதும் இல்லை. அவ்வாறு சிந்தித்திருந்தால் ஏனைய பிரதேசங்களில் இருக்கின்ற பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களைப்போன்று இன்று முன்னிலை சங்கமாக இருந்திருக்கும்.

 

12 வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண கூட்டுறவுச் சங்கங்களில் முதல் நிலையில் இருந்த அட்டாளைச்சேனை கூட்டுறவுச்சங்கம் இன்று சொல்லமுடியாத நிலையில் இருக்கின்றது. அதற்கான காரணங்களைச் தேடிப்பார்த்தால் அங்கு அநியாயங்களும், களவுகளும், கொள்ளைகளும், குடும்ப மாபியாக்களுமே இடம்பெற்றுவந்துள்ளது. குறிப்பாக, சுயநல இலாபம் கருதியும், குடும்பங்களையும், அவர்கள் சார்ந்தவர்களையும், முன்னேற்றும் செயற்பாடுகளிலேயே இருந்து வந்துள்ளார்கள். இந்த செயற்பாடுகளை மாறைப்பதற்காக 55 நபர்களைக்கொண்ட சபை உறுப்பினர்களை 4 பேராக இயங்க வைத்துள்ளார்கள்.

அவர்களின் இந்தப்போக்கை கண்டித்தும், எதிர்த்தும் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திராய்க்கேணி, திகவாபி போன்ற பிரதேச மக்கள் மாற்றத்திற்கான முன்னணியுடன் இணைந்து இன்று பாரிய போர்க்கொடியை எந்திவருகின்ற நிலைமை உருவாகியுள்ளது என்றார்.

 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாற்றத்திற்கான முன்னணியின் தலைவர், பொருளாளர், உறுப்பினர்கள், கல்விமான்கள், உலமாக்கள், விளையாட்டுக் கழகங்களின் தலைவர், செயலாளர்கள், ஊர் நலன் விரும்பிகள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.