வட்டுவாகல் கோத்தபாய கடற்படைமுகாம் காணி அளவீட்டு முயற்சி மீண்டும் தடுத்து நிறுத்து; காணிப்பிணக்குத் தொடர்பான கலந்துரையாடலுக்கு மக்கள் பிரதிநிதிகளும் அழைக்கப்படவேண்டும் – காணிஉரிமையாளர்கள் வலியுறுத்து.

விஜயரத்தினம் சரவணன்
ஆகஸ்ட்.23

முல்லைத்தீவு – வட்டுவாகல் கோத்தாபய கடற்படை முகாம் அமைந்த பகுதியிலுள்ள தமிழ் மக்களின் 617ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினர் அபகரிக்க எடுத்த முயற்சி 23.08.2022 இன்று மீண்டும் காணி உரிமையாளர்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வட்டுவாகல் கோத்தபாய கடற்படைத் தளத்தினை அகற்றுமாறும், அங்குள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் காணிஉரிமையாளர்களான தமிழ்மக்கள் மீள்குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக வலியுறுத்திவந்திருந்தனர்.

அத்தோடு கடற்படையினர் குறித்த காணிகளை அளவீடுசெய்து அபகரிக்க எடுத்த முயற்ச்சிக்கும் எதிர்ப்புத் தெரிவித்து பலதடவைகள் காணி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் இறுதியாக நில அளவீட்டிற்கு எதிராக காணி உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், இக்காணிப்பிணக்குத் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் மாவட்டசெயலரின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்துவதாகவும், அக்கலந்துரையாடலுக்கு காணி உரிமையாளர்கள், மக்கள்பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர், கடற்படையினர் அழைக்கப்பட்டு கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் என்ற உறுதிமொழியும் வழங்கியிருந்தார்.

அதன்படி 23.06.2022அன்று முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இக் காணிப்பிணக்குத் தொடர்பாக ஓர் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலில் மேலுதிக மாவட்டசெயலர், கரைதுறைப்பற்று பிரதேசசெயலர், சிரேஸ்டநிலஅளவை அத்தியட்சகர், அரச நிலஅளவையாளர், முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலவலர், பிரதேசசெயலக காணிவெளிக்கள உத்தியோகத்தர்கள், காணிக்கு உரிமைகோருபவர்கள் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலின் முடிவில் காணியை அளவீடுசெய்வதென முடிவெடுக்கப்பட்டுமிருந்தது.

அந்தவகையில் 23.08.2022இன்று அளவீடுசெய்வதற்காக நிலஅளவைத்திணைக்களத்தினர் வருகைதந்தபோது நில அளவைத்திணைக்கள வாகனத்தினை கோத்தபாய கடற்படை முகாம் வாயிலில்வைத்து காணிஉரிமையாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் வழிமறித்து, நிலஅளவீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

குறிப்பாக 23.06.2022அன்று மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படாமைதொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

அத்தோடு குறித்த கலந்துரையாடலில் காணிஉரிமையாளர்கள் பெரும்பாலானோர் காணி அளவீட்டிற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையிலும் காணியினை அளவிட கலந்துரையாடலின் முடிவில் முடிவெடுக்கப்பட்டதாகவும், அக்கலந்துரையாடலுக்கு காணி உரிமையாளர்களைவிடவும் அதிகமான அளவில் புலனாய்வாளர்கள் வருகைதந்திருந்ததாகவும் காணி உரிமையாளர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.

அத்தோடு காணிஅளவிட ஒத்துழைக்குமாறு புலனாய்வாளர்கள் காணிஉரிமையாளர்கள் பலரதும் வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தியதாகவும் காணிஉரிமையாளர்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிறிதொருநாளில் மாவட்டசெயலகத்தில், மாவட்டசெயலர்தலைமையில் இக்காணிப்பிணக்குத் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்குசெய்யுமாறு காணிஉரிமையாளர்களால் தெரிவிக்கப்பட்டதுடன், அக் கலந்துரையாடலுக்கு மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மீண்டுமொரு கலந்துரையாடலை நடாத்தி காணி அளவிடுவதுதொடர்பில் ஆராயுமாறு வலியுறுத்தி காணிஉரிமையாளர்களின் கையொப்பத்துடன் நில அளவையாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

வட்டுவாகல் கோத்தபாய கடற்படைமுகாம் அமைந்துள்ள காணி தொடர்பில், காணி உரிமையாளர்கள் பலர் தமது காணிகளை வழங்குவதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலை உள்ளது.

எனவே மக்கள் பிரதிநிதிகளை அழைத்து, காணி உரிமையாளர்களையும் சேர்த்து ஓர் கூட்டத்தினை ஒழுங்குசெய்து இந்தப் பிணக்குத் தீர்க்கப்படவேண்டும்.

இக்கோரிக்கையினை இதற்கு முன்பு இடம்பெற்ற இந்த காணி அளவீட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின்போது தெரிவித்திருந்தோம்.

அவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தபோது ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைதந்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மக்கள் பிரதிநிதிகளையும், காணிஉரிமையாளர்களையும், உரிய திணைக்கள அதிகாரிகளையும் அழைத்து கலந்துரையாடல் நடாத்தி இக்காணிப் பிணக்குத் தீர்க்கப்படும் எனவும் உறுதிமொழி வழங்கியிருந்தார்.

அந்த உறுதிமொழி மீறப்பட்டு 23.08.2022இன்றும் நில அளவை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

எனவே காணி உரிமையாளர்களையும், இப்பகுதி மக்கள் பிரதிநிதிகளையும், அழைத்து அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தி இக் காணிப்பிணக்கிற்குத் தீர்வுகாணுமாறு குறித்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் பாராளுமன்றஉறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.