1கிலோ தேயிலையைக் கூட கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம்!..

மஸ்கெலியா பெருந்தோட்டயாக்கம் தமது உறுதிமொழிகளை எழுத்துமூலம் வழங்கினால் போதாது அவை முழுமையாக அமுல்படுத்தப்படும்வரை ஒரு கைப்பிடி தேயிலையைக்கூட தொழிற்சாலையை விட்டு வெளியில் ஏற்றிச்செல்ல அனுமதியளிக்க மாட்டோமென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

மஸ்கெலியா பெருந்தோட்டயாக்கத்துடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பல உறுமதிமொழிகளை அவர்கள் வழங்கினர்.

“தோட்டத் தொழிலாளர் ஒருவர் முழு நாள் வேலை செய்தால் அவருக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளி தமது முழுமையான பணியை 4 மணித்தியாலங்களில் முடித்தாலும் அவருக்கு முழுiயான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

தொழிலாளி ஒருவர் முழுநாள் பணிபுரிந்து 20 கிலோ கொழுந்து அல்ல இரண்டு கிலோ கொழுந்தை பறித்தாலும் அவருக்கு நாட் சம்பளம் வழங்கப்பட வேண்டும். தேயிலை மலையில் கொழுந்து இருக்கின்ற அளவுதான் தொழிலாளர்களால் பறிக்க முடியும்.

ஓவ்வொரு நிலுவைக்கும் 2 கிலோ கொழுந்து கழிக்கப்படுகிறது. தினமும் 3 முறை நிலுவை பார்த்தால் 6 கிலோ கழிக்கப்படுகிறது. இனி அவ்வாறு செய்ய முடியாது. ஒரு கிலோ கொழுந்தைதான் நிலுவைக்கு கழிக்க முடியும்.

ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தொழிலாளர்கள் பணிப்புரிந்தால் அவர்களுக்கு ஒன்றரை பேர் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், தொழிலாளர்களுக்கான விடுமுறைகள் சம்பளத் துண்டிப்பின்றி அனுமதிக்கப்பட வேண்டும்.

சம்பள நிர்ணய சபையின் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்து கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவே வழங்கப்படுகிறது. இன்று உலக சந்தையில் தேயிலையின் விலை பாரியளவு உயர்வடைந்துள்ளது. ஒரு கிலோ தேயிலை 100 ரூபாவாக இருந்தபோது வழங்கப்பட்ட தொகையே இன்றும் வழங்கப்படுகிறது. அதன் காரணமாக புதிய விலைக்கு ஏற்றால்போல் இத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.

வாராந்தம் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்களை தோட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என்பதுடன், காடாகியுள்ள காணிகளை சுத்தம் செய்ய வேண்டும்.

அதேபோன்று பயன்படுத்தப்படாதுள்ள நிலங்களை விவசாய நடவடிக்கைகளுக்காக இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அத்துடன், புதிதாக தேயிலைச் செடிகளும் நடப்படல் வேண்டும்.

தொழிலாளர் சம்பளத்தில் வங்கிக்கடனுக்காக அறவிடப்படும் நிதிகள் உடனடியாக செலுத்தப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட இந்த அனைத்து தீர்மானங்களையும் அமுல்படுத்துவதாக மஸ்கெலியா பெருந்தோட்டுயாக்கம் இ.தொ.காவிடம் உறுதியளித்துள்ளது. அவை அனைத்தும் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் மாத்திரமே அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் சிந்திக்க முடியும். அதுவரை ஒரு கிலோ தேயிலைத் தூளைக்கூட தொழிற்சாலையிலிருந்து கொண்டுள்ள செல்ல அனுமதியளிக்க மாட்டோம்’’ என்றும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.