மின்சாரக் கட்டண இணையத்தளம் ஹேக் -10 கோடி பண மோசடி – 24 வயது இளைஞன் கைது!
மின்கட்டண இணையதளத்தை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபட்ட 24 வயது இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் 10 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர் இராணுவ விசேட அதிரடிப் படையில் இருந்து தப்பிச் சென்றவர் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கசினோ விளையாட்டுகளில் தீவிரமான குறித்த இளைஞன், கொழும்பில் உள்ள பிரபல கசினோ நிலையத்திற்கு வருபவர்களிடம் தள்ளுபடி அடிப்படையில் மின்கட்டணம் செலுத்தலாம் எனக்கூறி அவர்களிடம் பண மோசடி செய்துள்ளார்.
பெருந்தொகையில் மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் இந்த மோசடி வலையில் சிக்கியுள்ளதாக காவல்துறை கணினி குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் மின்சாரக் கட்டணத்தை செலுத்தும் தரகர் நிறுவனம் ஒன்றின் கணக்கை ஹேக் செய்தே பணமோசடியை செய்துள்ளார்.
இதேவேளை, இணையத்தளத்தை எவ்வாறு ஹேக் செய்வது என அவர் சுயமாகக் கற்றுக்கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மோசடி செய்த பணத்தை அவர் கசினோ விளையாட்டுகளில் பயன்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபருடன் தொடர்புடைய பல தரகர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறை கணினி குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை