சிறிலங்கா இந்தியா இடையேயான தசாப்தம் தாண்டிய திட்டம் – வெகு விரைவில் செயலாக்கம்!
இந்தியா மற்றும் சிறிலங்காவிற்கிடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படும் என இந்தியாவிற்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக முன்மொழியப்பட்ட இந்த திட்டம் இதுவரை சிறிய அளவிலான முன்னேற்றத்தையே எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
இவ்வாறு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை ஒன்றிணைக்கும் உடன்படிக்கையை எற்படுத்திக்கொண்டதன் பின்னர் செயலாக்க ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் மின் கட்டமைப்பை உருவாக்கி, சிறிலங்காவில் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்ய முடியும் என சிறிலங்கா நம்புவதாகவும் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை