சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவுமாறு அமைச்சர் நஸீர் அஹமட் கோரிக்கை

இலங்கை முன்னெடுக்கும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியதவி வழங்குமாறு, இலங்கைக்கு உதவி வழங்கும் முகவர் நிலையங்களை சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.

நிதியுதவி வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பிலே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் –

சுற்றாடல் திட்டங்களுக்கான நிதியைப் பெறும் இலக்குகள் நோக்கி இலங்கை நகர வேண்டியுள்ளது. இது தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதுடன் பயிற்சியிலும் ஈடுபடுவது அவசியம்.

இதனால் கிடைக்கும் அனுபவங்கள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள சுற்றாடல் திட்டங்களுக்குப் பலம் சேர்க்கும்.

சுற்றாடலை அபிவிருத்தி செய்வதற்கான உண்மையான இலக்குகளைக் கண்டறிவது தான் இந்தச் செயற்றிட்டத்தின் பிரதானம்.

இதனால், இதற்குத் தேவையான நிதிகள் இந்தச் செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் பாதிப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சுற்றாடலை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பங்காளர்கள் தங்களது அனுபவங்கள், இந்தத் திட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன் வைத்திருந்தனர்.

இதைக் கவனத்தில் கொண்ட அமைச்சர், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நடத்தப்படும் கூட்டங்களில் அவசியம் கலந்துகொள்ளுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், இவ்வாறான திட்டங்களுக்கு உதவியளித்த முகவர் நிறுவனங்களுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.