நானுஓயா வாகன விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி நிதியுதவி!

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பல வாகனங்கள் தொடர்புடைய கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி நிதியுதவி வழங்கியுள்ளத.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், விபத்தில் படுகாயடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுமிக்கான கொடுப்பனவு உட்பட 17 லட்சம் ரூபாய் உதவித் தொகை, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கொலபொடவிடம் கல்லூரி அதிபரால் கையளிக்கப்பட்டது.

இந்த விபத்தின் போது, வேனில் பயணித்தவர்களில் படுகாயமடைந்த சிறுமியொருவர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். அவரின் எதிர்கால நடவடிக்கைக்காக வங்கியில் 8 லட்சம் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளது.

மாணவர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட கல்லூரி சமூகம் இணைந்தே இந்த நிதியை திரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிதி வழங்கும் நிகழ்வில், கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தின் பிரதானி, நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்லூரியின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த ஜனவரி 20ஆம் திகதி கொழும்பு, தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்த பேருந்து, வேன் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த ஆறு பேரும், முச்சக்கர வண்டி சாரதியும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.