டெங்கை ஒழிக்க சுகாதாரத்துறைக்கு ஒத்துழைக்காதோர் மீது சட்ட நடவடிக்கை!

தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் தேசிய நுளம்பு ஒழிப்பு நிகழ்ச்சிக்கு அமைவாக டெங்கு பரிசோதனை நிகழ்ச்சியும்,  நுளம்பு ஒழிப்பு முறை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்பூட்டலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் இன்று (செவ்வாய்க்கிழமை) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே. கே.எம். அர்சத் காரியப்பரின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு டெங்கு கட்டுப்பாடு தொடர்பில் விளக்கமளித்தார்.

மேலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பி.எம். வாஜித், பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். பைஸால், மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல். லாபீர், உட்பட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை நிர்வாகத்திற்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள், சுகாதார ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய நிர்வாக பிரதேசங்களில் இடம்பெற்ற கள ஆய்வு விஜயத்தின் போது டெங்கு பரவும் இடங்கள் அழிக்கப்பட்டதுடன், காணி உரிமையாளர்களுக்கு ஆலோசனைகளும், சிலருக்கு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்ட சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர், காலநிலை மாற்றம் காரணமாக மழைகாலம் ஆரம்பமாக உள்ளதனால் நுளம்பு பெருகுவதனை குறைக்கவும், எங்கள் பகுதியில் டெங்கு பரவுவதைத் தடுக்கவும், தினமும் காலை குறைந்தது 10 நிமிடங்கள் உங்கள் சுற்றுச்சூழலைப் நுளம்பு பெருகும் இடங்களை அகற்றி டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மேலும் பொதுமக்களாகிய அனைவரும் எமது பிரதேசத்திலிருந்து டெங்கை ஒழிக்க உதவுமாறும் தனியே சுகாதாரத் துறையினரால் மாத்திரம் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை சகலரும் அறிவீர்.

பொதுமக்கள் தமது வீடு வளவுகளில் தினமும் நீர் தேங்கி நிற்கக்கூடிய பொருட்கள் மற்றும் இடங்களை அகற்றுங்கள் அல்லது நீர் தேங்கி நிற்காதவாறு கவனியுங்கள் எனவும், டெங்கை ஒழிக்க சுகாதாரத்துறைக்கு ஒத்துழைக்காதோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.