கண்காணிக்க குழு அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்க முடியாது – பெப்ரல்
மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை கண்காணிப்பதற்கு குழுவொன்றை அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்க முடியாது.
அவ்வாறானதொரு தீர்மானத்தை அரசாங்கம் எடுக்குமானால், தேர்தல் இடம்பெறுவது மேலும் பிற்படுத்தப்படும் என்பது தெளிவாகின்றது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாள் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை கண்காணிப்பதற்கு அரசாங்கம் குழுவொன்றை அமைப்பதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –
மாகாணசபைகளைக் கண்காணிப்பதற்கும் உள்ளூராட்ச்சி மன்றங்களைக் கண்காணிப்பதற்கும் குழுவொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் பிரேரித்திருப்பதாகத் தெரியவருகிறது.
எந்தவொரு தேர்தலையும் அண்மைக்காலத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் எந்த தயாரும் இல்லை என்பதே இதன் மூலம் தெளிவாகின்றது.
அதேபோன்று கண்காணிப்பு குழு அமைப்பதன் மூலம் நிறைவேற்றுத்துறை இந்த நிறுவனங்களின் அதிகாரங்களை மீண்டும் தனது கையில் வைத்துக்கொள்ளும் நிலையே ஏற்படுகிறது. இவ்வாறான நிலைமை ஜனநாயக நாடொன்றுக்கு எந்தவகையிலும் பொருத்தம் இல்லை.
அதனால் நாட்டின் ஜனநாயகம், அதிகாரப் பரவலாக்கம், அபிவிருத்தி சமநிலையைப் பாதுகாத்துக்கொள்ளும் அதிகாரம் இருப்பது நாடாளுமன்றத்துக்காகும்.
அதிகாரங்கள் தனி ஒருமனிதனை சுற்றி இருப்பது எந்தவொரு நாட்டுக்கும் நன்மையாக அமையப்போவதில்லை. அதனால் இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனம் செலுத்தப்படவேண்டும்.
அத்துடன் நாடாளுமன்றத்தில் இருக்கும் ஆளும் எதிர்க்கட்சி யாராக இருந்தாலும் அரசாங்கத்தின் இந்த தீர்மானம் ஒரு தரப்பினருக்கு நல்லதாக இருந்தாலும் நாடு என்றவகையில் ஜனநாயகத்தின் பெறுமதியைக் கருத்திற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுதொடர்பாக ஒன்றாக செயற்பட வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் இதனை உங்களால் பாதுகாக்க முடியாமல் போனால் எதிர்காலத்தில் இதன் பெறுபேறு உங்களுக்கு எதிராகவே அமையும். ஏனெனில் ஜனநாயக தேர்தல் முறையில் அடுத்த முறை நீங்கள் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டி ஏற்பட்டால் இதன் பாதிப்பு உங்களுக்கே ஏற்படும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை