பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளவர்களே உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை விமர்சிக்கிறார்கள் – நீதியமைச்சர்

எதிர்காலத்தில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளவர்களே உத்தேச பயங்கரவாத தடைச் சட்டமூலத்தைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

மனித உரிமைகளுக்கு எதிரான ஏற்புகள் காணப்படுமாயின், நாட்டு மக்கள் எவரும் உயர் நீதிமன்றத்தை நாடலாம். சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்போம் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் –

பயங்கரவாதச் செயற்பாடுகளில் எவரும் ஈடுபடாவிட்டால், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கண்டு அச்சமடையத் தேவையில்லை. எதிர்காலத்தில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளவர்களே தற்போது கலக்கமடைந்துள்ளார்கள். இதன் காரணமாகவே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

சிறு குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபர்களை சிறைக்கு அனுப்பாமல், உரிய பாதுகாப்பு தரப்பினர் ஊடாக அவர்களைக் கண்காணிக்கும் வகையில் சட்டத்தை திருத்தம் செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறு குற்றங்களுக்காக சிறை செல்பவர்கள் சிறையில் இருந்து வெளியில் வரும்போது பாரதூரமான குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபராக மாறிவிடுகிறார்கள்.

இந்நிலையை மாற்றியமைப்பதற்காகவே சட்டத்தை மறுசீரமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உத்தேச பயங்கரவாத தடைச் சட்டமூலம் ஏப்ரல் மாதத்துக்குள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளது.

பயங்கரவாதம் எப்போது தோற்றம் பெறும், எப்போது வெளிப்படும் என்பதை சோதிடத்தால் கணிக்க முடியாது. நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் உருவாக்கப்படும்.

ஒன்றில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது நாடு சீரழியட்டும் என்று எண்ணிக்கொண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும். இவ்விரண்டில் ஒன்றைத் தீர்மானிக்க வேண்டும்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மறுசீரமைக்கும் யோசனைகளை எதிர்தரப்பினர் முன்வைத்தால் அதனை மீளாய்வு செய்வோம்.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை புலம்பெயர் அமைப்புக்களும், அரசாங்கமும் தீர்மானிக்க முடியாது. உயர் நீதிமன்றத்துக்கே அந்த அதிகாரம் உண்டு. ஆகவே, தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான விடயங்களை உள்ளடக்கியுள்ளது என சவாலுக்குட்படுத்தி நாட்டு மக்கள் எவரும் உயர் நீதிமன்றத்தை நாட முடியும். அதற்காக சட்டத்தரணிகளை அணுகுவதற்கான வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்போம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.