முடிந்தால் ஒருவரையேனும் இணைத்துக்கொள்ளுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அரசாங்கத்திற்கு சவால்

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குச் செல்வதாக போலிச் செய்திகளை உருவாக்கி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தும் சதித்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் பணத்திற்காக தமது சுயமரியாதையை தாரைவார்க்க மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கடுவளை ரணால பிரதேசத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குச் செல்வதாக போலிச் செய்திகளை உருவாக்கி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தும் சதித்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு பணமில்லாத இந்த அரசாங்கம், அரசாங்கத்தின் பக்கம் இணைத்துக்கொள்வதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து முயற்சித்தாலும்,அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பணமில்லாமல் எதிர்க்கட்சியுடன் இணைய தயாராக உள்ளனர்,ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் பணத்திற்காக தமது சுயமரியாதையை தாரைவார்க்க மாட்டார்கள்.

2020 ஆம் ஆண்டு 6 மாத கால வயதான ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 54 ஆசனங்களை வழங்கி தேர்தல் வரலாற்றில் சாதனை படைக்க இந்நாட்டு மக்கள் உதவினார்கள்.எனவே 2ஆயிரம் இலட்சம் அல்ல, அதற்கு மேல் கொடுத்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சலுகைகளுக்காகவோ வரப்பிரசாதங்களுக்காகவோ தங்கள் சுயமரியாதையை இழக்க மாட்டார்கள் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார்கள் முடிந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரை தன் பக்கம் இணைத்துக்கொள்ளுங்கள் பார்ப்போம் என தான் அரசாங்கத்திற்கு சவால் விடுகின்றேன். இவ்வாறு மக்களுக்கு துரோகம் இழைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை

இவ்வாறு அரசாங்கத்தின் பக்கம் இணைத்துக் கொள்வதற்கு பணமாக கறுப்புப் பணமும்,பண்டோரா பத்திர பணமுமே பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த அரசாங்கம் சகல பக்கத்தாலும் மக்களை துரத்தித் துரத்தி தாக்கி வருகிறது. மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமும்,வரிகளை அதிகரிப்பதன் மூலமும்,வட்டி வீதத்தை அதிகரிப்பதன் மூலமும் மக்கள் நசுக்கப்படுகிறார்கள்.

அதுமட்டுமின்றி அரசியலமைப்பை மீறி தேர்தலை சீர்குலைத்து வருகிறது. அதையும் தாண்டி,புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வந்து தொழிற்சங்க தலைவர்கள்,பல்கலைக்கழக மாணவர்களையும் சாதாரண மக்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த முயற்சிக்கின்றது.

அப்படியானால் கோத்தாபய ராஜபக்ஷ்வை துரத்துவதற்கு வீதிக்கிறங்கிய இலட்சக்கணக்கான மக்களை பயங்கரவாதிகள் என தெரிவித்து சிறையில் அடைக்க முடியும். இதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.