பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்து ஆடு கடத்த முயன்றவர் மாட்டினார்! சாவகச்சேரியில் சம்பவம்

சாவகச்சேரியில் பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்து ஆடு கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்லும் வாகனங்கள் சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சாவகச்சேரி பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை கடத்திச் செல்ல முயன்றவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்,

கைது செய்யப்பட்டவர் கடமையில் இருந்த பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்து தப்பிக்க முற்பட்ட போதிலும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சாஜன் தர அதிகாரி 50 ஆயிரம் ரூபா லஞ்சத்தை வாங்க மறுத்துள்ளதோடு நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளையும் சந்தேக நபரையும் கைது செய்துள்ளார்.

லொறியுடன் கைது செய்யப்பட்டவரிடம் சாரதி அனுமதி பத்திரம் இல்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீண்ட காலமாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடங்களுக்கு ஆடு, மாடுகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுளா செனரத்தின் வழிகாட்டுதலில் குறித்த பகுதிகளில் தொடர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இந்தக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.