அந்தமானில் 6 மாதங்களாக சிக்கித் தவிக்கும் கல்குடா மீனவர்கள் நால்வரையும் மீட்குமாறு கோரிக்கை

மட்டக்களப்பு – கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த நிலையில், அந்தமான் தீவில் தங்கி நின்று, ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது.

இன்னமும் இலங்கைக்கு திரும்ப முடியாமல் அத்தீவுக் கூட்டங்களில் சிக்கித் தவிக்கும் அந்த மீனவர்களை மீட்டெடுக்குமாறு சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றது.

இதில் பிரதேச மக்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டபோதே அந்தமான் தீவில் சிக்கித் தவிக்கும் கல்குடா மீனவர்கள் தொடர்பான விடயமும், கல்குடா அல் அமான் படகோட்டிகள் சங்க உறுப்பினரான எச்.எம். தௌபீக் மற்றும் மீன்பிடி உத்தியோகத்தரான முஹம்மத் இம்தியாஸ் ஆகியோரால் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்கள்,

மீனவர்களான ஏ.எம். முஹாஜித் (வயது 34), எம்.எச்.எம். றிஸ்வி (வயது 35), பி.எம். இர்ஷாத்  (வயது 33), எம். அஸ்வர் (வயது 29) ஆகியோர் முறைப்படி மீன்பிடிக்கான அனுமதி பெற்றுக்கொண்டு கடந்த 2022 செப்டம்பர் 25ஆம் திகதி வாழைச்சேனையிலிருந்து வங்காளக் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.

எனினும், வழமையாக மீன்பிடியில் ஈடுபட்டு திரும்பும் குறிப்பிட்டதொரு காலத்தையும் தாண்டி, அவர்கள் கரை திரும்பாததால் நாங்கள் அவர்களை தேடத் தொடங்கினோம்.

அப்போதுதான் அவர்கள் சென்ற படகின் இயந்திரம் செயலிழந்து, அந்த மீனவர்கள்  அந்தமான் தீவில் சிக்கித் தத்தளிப்பது தெரியவந்தது.

இந்நிலையில் இந்திய கரையோரக் காவல் துறையினர் அவர்களை காப்பாற்றி கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து இலங்கை கடற்றொழில் அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இந்தியத் தூதரகம் உள்ளிட்ட இன்னும் பல இடங்களுக்கும் அறிவித்து, மீனவர்களை மீட்டுத் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆயினும், இப்பொழுது ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், அவர்களை மீட்பதற்கான எந்தவித முயற்சியும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

எனவே, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அமைச்சருமான தங்களிடம் இந்த விடயத்தை சமர்பிக்கின்றோம் என்றனர்.

அவர்களது கோரிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் நஸீர் அஹமட், இந்த விடயத்துக்கு முன்னுரிமை அளித்து, அந்தமான் தீவில் சிக்கித் தவிக்கும் கல்குடா மீனவர்களை மீட்டெடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.