நிவாரணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நேர்ந்துள்ளது?   கபீர் ஹாசிம் கேள்வி

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கைத்தொழில் துறையினருக்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய வங்கி விடுத்த சுற்றறிக்கைக்கு அமைய தொழில் துறையினருக்கு நிவாரணம் கிடைக்கப்பெறவில்லை.

நிவாரணம் வழங்கலுக்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு நேர்ந்தது என்ன என்பதை ஆராய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் சபையில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது  உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  நாட்டு மக்களுக்கு அண்மையில் ஆற்றிய உரையில் நான்கு பிரதான வழிமுறைகளில் 2048 ஆம் ஆண்டு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாகக் குறிப்பிட்டார். பொருளாதாரப் பாதிப்புக்கு முன்னனி வகித்தவர்களுடன் ஒன்றிணைந்து ஜனாதிபதி செயற்படுகிறார்.ஆகவே, 2048 ஆம் ஆண்டுக்கு முன்னர் 1948 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு செல்லாமல் இருக்க வேண்டும்.

நாட்டின் கடன் நிலையை ஸ்திரப்படுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக வங்கி வட்டி, கடன் வட்டி வீதம், மின்சார கட்டணம் , நீர் கட்டணம் உட்பட சேவை துறைகளின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளன. வங்கி கடன் வட்டி வீதம் அதிகரிப்பால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர், கைத்தொழில் முயற்சியாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் தொழில் முயற்சியாளர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொழிற்துறையினர் தாம் எதிர்கொண்டுள்ள  நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை முன்வைத்தும் இதுவரை நியாயமான தீர்வு ஒன்று கிடைக்கப் பெறவில்லை.

வங்கி கடன் தவணை செலுத்தலில் கால அவகாசம் வழங்கல் அல்லது வட்டி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் முன்வைத்துள்ளார்கள். தொழில் முயற்சியாளர்களின் கடன்களுக்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய வங்கி கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில்  சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்கப் பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிவாரணம் தொழில் முயற்சியாளர்களுக்குக் கிடைக்கவில்லை.

அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள், முக்கிய தொழில் பிரமுகர்கள் ஆகியோருக்கு இடையிலான நல்லிணக்கத்தின் அடிப்படையில் தான் நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆகவே மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை செயற்படுத்தாதது ஏன் என்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.