ஆளுமைக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு: 36 துறை சார்ந்தவர்களுக்கு கௌரவமளிப்பு! ஹக்கீம், ஹரிஸ் உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கேற்பு

 

நூருல் ஹூதா உமர்

அக்கரைப்பற்று தமிழ் லெட்டர் வலையமைப்பு எட்டாவது தடவையாக நடத்திய ஆளுமைக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு இம்முறை இக்கட்டான காலத்தில் சிறப்பாக செயலாற்றியவர்களை கௌரவிக்கும் விதமாக அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் தமிழ் லெட்டர் பிரதானி சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல். ரமீஸின் நெறிப்படுத்தலில் அதிபர் ஏ.ஜீ.எம். அன்வர் தலைமையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

அதில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆளுமைக்கான விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது, பூர்வீக சமூகத்தின் நம்பிக்கை விருது, சிறந்த கல்வி சேவைக்கான விருது, சிறந்த சமூகவியலாளர் விருது, சிறுவர் மேம்பாட்டுக்கான விருது, சமூக சேவைக்கான விருது, வளர்ந்து வரும் அரசியல் தலைமைத்துவ விருது, இளம் தலைமைத்துவ சமூக விருது, சிறந்த இளம் தொழிலதிபர் விருது, மக்கள் அபிமான விருது, தொழிநுட்ப விருது, உள்ளூராட்சி மன்ற தலைவர் விருது, உள்ளூராட்சி உறுப்பினர் தலைவர் விருது, சிறந்த ஆயுர்வேத வைத்தியசாலை நிர்வாகத்துக்கான விருது, மருந்தாளருக்கான விருது, நல்லிணக்கத்துக்கான விருது, சுகாதார சேவைகளுக்கான விருது, சிறந்த எழுத்தாளருக்கான விருது, விளையாட்டுத்துறை விருது, சிறந்த மனிதாபிமான விருது, பெண்கள் மேம்பாட்டுக்கான விருது, ஆளுமைப் பெண்ணுக்கான விருது, சமூக சேவைக்கான விருது என்பன வழங்கப்பட்டன.

பிரபல ஊடகவியலாளர், அறிவிப்பாளர் யூ.எல்.என். ஹூதா தொகுத்து வழங்கிய இந்நிகழ்வு சிரேஷ்ட ஊடகவியலாளர், அதிபர் எம்.ஐ.எம். றியாஸின் தொடக்கவுரையுடன் ஆரம்பமானது. இந்த ஆளுமைக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழு செயலாளர் எம். கோபாலரத்னம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

மேலும் அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர், பிரதேச சபைகளின் முன்னாள் பிரதி தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.