மக்களின் மனங்களைவென்ற தலைவர்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படல் வேண்டும்! ஹக்கீம் முன்னிலையில் சபீஸ் கோரிக்கை

நூருல் ஹூதா உமர்

மனிதன் 65 வருடங்கள் ஆரோக்கியமாக வாழலாம். அதன் பின்னர் பல்வேறு உடலியல், உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். அதற்கிடையில் இப்போது இருக்கும் தலைவர்கள் சிறந்த தலைமைத்துவ பண்புகள் நிறைந்த அடுத்த தலைமுறை தலைமைத்துவங்களை உருவாக்க வேண்டும். மறைந்த தலைவர் அஷ்ரப்பிற்கு எத்தனைபேர் இன்றும் பிரார்த்திக்கிறார்கள். அப்படி மக்களின் மனங்களை வென்ற தலைவர்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்று அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான, அக்கறைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எம். சபீஸ,; ஸ்ரீ.ல.மு.கா. தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் கேட்டுக்கொண்டார்.

சமூக, ஊடக, சமய, இலக்கிய, கலை, கலாசார துறைகளில் பணிபுரிந்த 36 பிரமுகர்களை சனிக்கிழமை இரவு அட்டளைசேனையில் வைத்து தமிழ் லெட்டர் வலையமைப்பு கௌரவித்து ‘சமூகப்பணியும் பொறுப்பு கூறலுக்குமான விருது’ வழங்கல் விழாவில் விசேட உரை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் –

மு.கா தலைமைத்துவம் என்பது ஒரு வரம். 1987 களில் ஏனைய கட்சியிலிருந்தவர்கள் அந்தக் கட்சிகளைக் கைவிட்டு மு.காவில் இணைந்துகொண்ட பொழுதுகள் இன்றும் கண்ணுக்குள் இருக்கின்றன. இரு சகோதரர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத காலமிது. இந்த காலத்தில் ஒரு நாட்டிலுள்ள பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள், அமைப்பாளர்கள், முக்கியஸ்தர்களுக்குள் ஆயிரமாயிரம் பிரச்சினைகள் வரும் அந்த பிரச்சினைகளை லாவகரமான முறையில் கையாளுவது என்பது இலகுவான காரியமல்ல. அவற்றை கையாளும் பக்குவம் பெற்ற அந்த தலைமையாக மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமை காண்கிறேன்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிங்கள் சந்தித்த பிரச்சினைகளை ராஜதந்திர ரீதியாக அணுகிய மு.கா. தலைவர் ஹக்கீமின் தலைமைத்துவ ஆளுமை பாராட்டக்கூடியது. அந்தக் காலத்தில் அரசியல், சமூக, சமய தலைமைத்துவங்கள் பயத்தில் இருந்தன. அந்த காலத்தில் ரவூப் ஹக்கீம் பிரச்சினைகளை அணுகிய விதம் வித்தியாசமானதாக அமைந்திருந்தது. சில தலைமைத்துவங்கள் ஒளிந்துகொண்டிருந்தமையையும் நாங்கள் மறந்துவிட வில்லை. ஒரு சமூகத்துக்கு அநீதி இடம்பெறும் போது சமூகத்தின் அபிமானிதங்களை சுமக்கின்றவர்கள் கிளர்ந்தெழவில்லை என்றால் அந்த அபிமானிதத்தை பெற தகுதியற்றவர்கள். அந்த அபிமானிதத்தை இறைவன் ஒருவருக்கு கொடுத்திருந்தால் அந்த அபிமானிதத்தை சுமக்க அவர் தகுதியானவர் தான். சமூகத்திற்கு எதிரான எந்த பிரச்சினை வந்தாலும் அங்கு ஹரீஸ் எம்.பியை காணலாம்.

சில பிரதேச செயலகங்களில் இனவாத செயற்பாடுகள் நடக்கின்றன. முஸ்லிங்களுக்கு வியாபார அனுமதி பத்திரங்கள் வழங்குவதிலையே தவறுகள் நடக்கின்றன. அதில் விதிவிலக்கான சில பிரதேச செயலாளர்களும் இல்லாமலில்லை. பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்களே பெரும் கௌரவம். பல கோடிகளை அள்ளிக்கொடுத்தாலும் வராத சந்தோசம் பாராட்டும் போது அவர்களுக்கு வரும். இப்போது முஸ்லிம் சமூகத்தை வழிநடத்த நிறையத் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தை வழிநடத்த நல்ல தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். சமூகம் எல்லாவற்றிலும் வளர வேண்டும். கடலில் கப்பல் ஓடினால் அது பெரும் வளர்ச்சியல்ல. எல்லா வளமும் இருந்தாலும் குறுக்குவழியில் சம்பாதித்து பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில்லாமல் சமூகமாக எல்லோரும் முன்னேற வேண்டும். அதற்காக சரியான தலைமைத்துவங்களை நாம் அடையாளம் காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழு செயலாளர் எம். கோபாலரத்னம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.