மாணவர்கள்; இலட்சியமுடையவர்களாக இருக்க வேண்டும் இலட்சியமில்லாத வாழ்க்கை உண்மையில் வாழ்க்கையல்ல! நீதிபதி எம்.எச்.எம்,ஹம்ஸா அறிவுரை

 

நூருல் ஹூதா உமர்

எதிர்காலத்தில் இந்த நாட்டை வளப்படுத்துகின்ற செல்வங்களான ‘மாணவர்களை’ மாணவச் செல்வங்கள் என்று அழைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என அக்கரைப்பற்று நீதிவான் ஃமாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்,ஹம்ஸா தெரிவித்தார். அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் சமுதாய சார் சீர்திருத்த திணைக்களத்தின் பங்களிப்புடன் நடைபெற்ற போதைப் பொருள் பாவனை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மாவட்ட நீதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலை அதிபர் ஏ.பீ.முஜீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீதிபதி ஹம்ஸா தொடர்ந்து உரையாற்றுகையில்; –

ஒவ்வொரு மாணவரிடத்திலும் தனித்தனி திறமையும் ஆற்றலும், இலட்சியமும் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் அந்த இலட்சியத்தை சிதைக்கின்ற செயற்பாடுகள் மிக கச்சிதமாக செயற்படுத்தப்பட்டு வருவதையறிந்து பல சந்தர்ப்பங்களில் நான் கவலைப்பட்டிருக்கின்றேன். எனது அனுபவத்தில் பல நீதிமன்றங்களில் மாணவர்களை சந்தகே நபர்களாக முன்னிலைப்படுத்துகின்ற போது அவர்களுடன் உரையாடியிருக்கின்றேன். அவர்களது குடும்ப நிலைமை, வறுமை, கெட்ட நண்பர்களின் சகவாசம் போன்றன அவர்களை தீய செயல்களுக்கு இட்டுச் சென்றிருப்பதை அறிய முடிந்தது.

நானும் எனது ஓ.எல். பருவத்திலும் பல இணைப்பாடவிதான செயற்பாட்டிலும், விளையாட்டுகளிலும், புறக்கீர்த்திய செயற்பாட்டிலும் ஈடுபட்டிருக்கிறேன். எனது பாடசாலை காலங்ளில் சரியாக பயன்படுத்தியதால் இன்று உங்கள் முன் நீதிபதியாக வந்திருக்கிறேன். உங்களில் பலர் வைத்தியர்களாகவும், சட்டத்தரணிகளாகவும், பொறியியலாளர்களாகவும், ஏன் நீதிபதிளாகக்கூட வர முடியும். அதை சிதைப்பதற்கு ஒரு குழுவினர் மாபியாவாக செயற்பட்டுக்கொண்டிருப்பதை, அதனால் வரும் அபாயத்தைப்பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் இலட்சியமுடையவனாக இருக்க வேண்டும், இலட்சியமில்லாத ஒரு வாழ்க்கை வாழ்க்கையல்ல ஒவ்வொருவரும் பெரும் கனவுகளைக் காண வேண்டும். இருக்கின்ற இலட்சியத்தை அடைவதற்கு அந்தக் கனவுகளை நனவாக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் இவ்வாறான அபாயங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

எனவே உங்களுடைய இலட்சியத்தை அடைவதற்கு தடையாகவிருக்கின்ற தடைக்கற்களை இனங்கண்டு உங்கள் இலட்சியத்தை முன் நோக்கி நகர்த்துவதற்கு திட்டமிட்டு செயற்பட வேண்டும். ஏன் என்றால் இலட்சியமில்லாத வாழ்வு ‘அச்சாணியற்ற தேர்’ போன்றது.மேலும் ஒருவரது வாழ்வில் இலட்சியத்தோடு பயணிக்காமல் மனம் போன போக்கில் வாழ்வது நடைபிணத்திற்கு ஒப்பானது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இலட்சியத்தையடைகின்ற பயணத்தில் பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் அப்போதெல்லாம் துவண்டுவிடாமல் மன உறுதியோடு நமது செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்திச்செல்ல அர்ப்பணிப்போடு கருமமாற்ற வேண்டும்.

பின் வரிசையிலிருக்கின்ற மாணவர்கள் எனக்கு கணிதம் வராது, ஆங்கிலம் வராது என்ற எண்ணத்திலிருக்காமல் அந்த எண்ணங்களை இன்றுடன் விட்டுவிடுங்கள். பல பின் வரிசை மாணவர்கள்தான் இன்று பெரும்பெரும் பதவிகளில் இருக்கிரார்கள். முட்டாள் மூலையென்று அழைக்கப்பட்ட பின்வரிசை மூலையில் கல்விகற்ற ‘வேனாட்சா’ பிற்காலத்தில் அறிஞரென்று அழைக்கப்பட்டார் அதேபோன்று ‘தோமஸ் அல்வா எடிசன்’ போன்ற விஞ்ஞானிகளை அவதானித்தால் அவர்ளுடைய மாணவ பருவ செயற்பாடுகள் அறிவு குறைந்த செயற்பாடுகளாகவேயிருந்திருக்கும். பிற்காலத்தில் அவர்கள் சமூதாயத்திற்கு பயனுள்ளவர்களாகவும்,அவர்களால் சமூகம் நண்மையடையக்கூடிய வகையிலும் பெரும் அறிஞர்களாக வளர்ச்சி பெற்றுயிருந்தார்கள்.

பெரும்பாலான மாணவர்களுக்கு நீதிமன்ற செயற்பாடுகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே நீதிமன்றங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு நடைபெறுகின்ற விடயங்களை அவதானிக்கச்செய்கின்ற போது எதிர் காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாதென்ற எண்ணமும், அச்சமும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உருவாகும். அதனால் பல்வேறு படிப்பினைகளை அவர்கள் பெறுவார்கள். மாணவர்கள் நீதிமன்ற கட்டமைப்பையறிந்து கொள்ளும் வகையில் நேரடியாகச் சென்று பார்ப்பதன் மூலம் எவ்வாரான குற்றச்செயல்களுக்கு எப்படியான தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வார்கள், சீர்திருத்தப்பாடசாலை, சிறைச்சாலை போன்றவற்றுக்கு தண்டனை வழங்கப்படுதல், மரணதண்டனை விதித்தல் என்பவற்றை மாணவர்கள் நேரடியாக பார்க்கின்ற போது குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற நிலையிலிருந்து விடுபட்டு விலகி.நடக்க காரணமாக அமையும்.

அண்மைக்காலமாக எமது பகுதிகளில் மட்டுமல்ல இலங்கையின் பல பாகங்களிலும் போதைவஸ்து பாவனை புற்று நோய்போன்று உருவெடுத்து சமூதாயத்தையும், குடும்பங்ளையும் சீரழித்துக்கொண்டிருக்கின்றது.
போதைவஸ்து பாவனைபற்றி அறியாத மாணவர்களாகிய எங்களிடம் இதைப்பற்றி ஏன் கூறுகிரார்கலென்று நீங்கள் யோசிக்கலாம் ஆனால் மாணவர்களே நீங்கள்தான் போதை மாபியா குழுக்களால் அல்லது வலைப்பின்னாலால் இலக்கு வைக்கப்பட்டுள்ளீர்கள் உங்களைதான் அவர்கள் தேர்வு செய்ய காத்துக்கொண்டிருக்கிரார்கள் இலகுவாக நீங்கள் அவற்றுக்கு அடிமையாகக் கூடிய வகையில் திட்டம் போட்டு செயற்படுகிரார்கள் இதனால் மாணவச் செல்வங்களின் எதிர்காலம் சீரழிக்கப்படுவதோடு போதை வியாபாரம் இலகுவாக அதிகரித்து சமூதாயத்தை அழிவுப்பாதைக்கியிட்டுச் செல்லுகின்றது. பலர் பணம் சம்பாதிப்பதற்கு போதை வஸ்து வியாபாரத்தை ஒரு வருமான மூலமாக கையிலெடுத்துள்ளதால் நமது இளம் தலைமுறையினர் அதற்கு அடிமையாகித் தமது வாழ்வைப் பலிகொடுத்து வருகிரார்கள்.

பல பேச்சாளர்கள் வந்து நீதிமன்றத்தில் நடைபெறும் விடயங்களை முன் வைத்துக் கேள்விச்சான்று கூறுவதை விட ஒரு நீதிபதியாக உங்கள் முன் வந்து பல விடயங்களை ஒப்புவிக்கிறேன். இதனை ஒரு படிப்பினையாகவெடுத்து மாணவர்களாகிய நீங்கள் எதிர் கால வாழ்வை வழமுள்ளதாக தனது குடும்பத்துக்கும், தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ளதாக வாழ்ந்து காட்ட தங்களது படிப்பை மட்டுமே ஆயுதமாகக்கொள்ள வேண்டும். தங்களது இலட்சியத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். அவ்வாறு இpல்லாமல் போதைவஸ்து மாபியாக்களால் சமுதாயத்தில் தோற்றுவிக்கப்படுகின்ற சட்ட விரோத செயல்களிலும், சமயத்திற்கு முரணான விடயங்களிலும் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்து வீட்டுக்கும்,நாட்டிற்கும் நல்ல பிரஜையாக உருவாவதற்கான ஏற்பாடுகளை பாடசாலைகளிலிருந்தே திட்டமிட்டு நாம் செயற்படுத்த வேண்டும்.

போதைவஸ்து பாவனை சமூகத்தில் எந்தெந்த வடிவில் வருவதென்று எம்மால் அனுமானிக்க முடியாதுள்ளது டொபி , ஐஸ்கிறீம்,மாத்திரை, தூள், குடிபாணம் போன்ற வடிவிலென்று அதன் வடிவத்தை நாம் அறியாமல் இருக்கின்றோம். எனவே மாணவர்களும், இளைஞர்களும் மிக இலகுவாக இதில் அகப்பட்டு கொள்ளக்கூடிய நிலைமை காணப்படுவது நாம் எதிர் கொண்டுள்ள மிகவும் ஆபத்தான விடயம் என்றும் கூறினார். நிகழ்வில் சமூமுதாயஞ்சார் சீர் திருத்த உத்தியோகத்தர் ஏ.எம்.நிசார், சேவைப்பரிசோதகர் எம்.எஸ். மொகம்மட், பாடசாலையின் ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.