இளைஞர்கள் தொழில் இன்மையால் பிழையான பாதையில் பயணித்து குற்றவாளிகளாக மாறினர்! இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான்

 

நூருல் ஹூதா உமர்

நாடோ அதால பாதாளத்தில் சென்று நாட்டின் பொருளாதார சிக்கலால் பல இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் போன்ற தொழில் வாண்மையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர், பலர் தொழில் நிலை பெற்றவர்களாக உள்ளனர், இன்னும் சிலர் போதைக்கு அடிமையாக உள்ளனர், மேலும் பலர் வறுமையால், தொழிலின்மையால் பிழையான பாதையில் பயணித்து தண்டனைக்குரிய குற்றவாளிகளாக மாறி வழக்கும் கையுமாக அலைகின்றனர். யுவதிகளுக்கான வாழ்வியல் வசதிகள் தற்போது உள்ளதா? எதுவுமே இல்லை. பல இளவயது திருமணங்களால் பல வாழ்க்கை சீரழிவுகளை யுவதிகள் அனுபவிக்கும் கால சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் தெரிவித்தார்.

ஐந்தாவது இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு 17,18 ஆம் திகதிகளில் ஜனாதிபதி செயலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது உத்தேச இளைஞர் நாடாளுமன்ற சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் –

உத்தேச இளைஞர்கள் நாடாளுமன்ற சட்ட மூலத்தின் பிரதான நான்கு பிரிவுகளாக தலைமைத்துவம், ஜனநாயக அமைப்பு, நாடாளுமன்ற நடைமுறை, நாடாளுமன்ற உறுப்புரிமை ஆகியன காணப்படுகின்றன. எனது பிராந்தியத்தில் இளைஞர்களுக்கான தலைமையாக பெரும்பான்மையான நண்பர்கள், சகோதரர்கள் ஊடாக இந்த நாடாளுமன்றம் வந்திருந்தேன். இந்த நாடாளுமன்றம் ஊடாக நன்றிக் கடன் செலுத்த முடியுமா என அலசிக் கொண்டு சென்ற போது எந்த வாய்ப்பும் நாடாளுமன்றம் ஊடகவோ, இங்கிருக்கும் அமைச்சர்கள் ஊடாகவோ கிடைக்கப் பெறவில்லை. இருந்த போதிலும் இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தை வைத்துக் கொண்டு பல சேவைகளை உள்ளூர், வெளியூர் முதலீட்டாளர்கள் கொண்டு செவ்வனே செய்து முடிந்தளவு நன்றிக் கடன் செலுத்தியுள்ளேன் என்பதில் மனமகிழ்ச்சி.

ஜனநாயக நாட்டில் ஜனநாயக அமைப்பானது ஜனநாயக பெறுமதி, ஜனநாயக கலாசாரம் என்ற பிரதான அம்சங்கள் கொண்டிருந்தாலும் இந்த உயர் சபைக்கு தேசிய ஜனநாயகத்தில் என்ன கிடைத்தது என்றால் கேள்வியாகவே கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம். நாடாளுமன்ற நடைமுறையே மக்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொள்ளும் இலகு வழி. இங்கிருந்து சட்டமூலம் உருவாக்கம், கொள்கை திட்டங்கள் உருவாக்கம் என்பன நாட்டு மக்கள், இளைஞர்கள் சார்ந்துள்ளன. இந்த உயர் சபையின் ஊடாக பல புதிய சட்டமூலங்கள், புதிய கொள்கைத் திட்டங்களைக் கடந்த காலங்களில் நாம் விவாதத்துக்கு கொண்டு வந்தோம். ஆனால் எங்களுடைய கொள்கைகள் எங்கே? சட்டமூலங்கள் எங்கே? சட்டம் வலுவாக இருந்தாலும், இளைஞர்கள் நாடாளுமன்றத்தின் ஊடாக இடம்பெறும் செயற்பாடுகள் போதுமானவையாக இல்லை. அதிகாரமில்லா சபையாகவே இச்சபை இயங்கி வருகின்றது. இங்கு கொண்டு வரப்படும் சட்டங்கள், கொள்கைகள் ஒவ்வொரு துறைசார் அமைச்சின் ஊடாக நாடாளுமன்றத்தில் கவனத்திற் கொள்ளப்பட்டால் இங்கு பல மாற்றங்கள் கொண்டு வரமுடியும்.

தேசிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இளைஞர்களுக்கான தொழில் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள், கல்வி ஊக்குவிப்பு நிகழ்வுகள், போதை அழிவுகளுக்கான அறிவுறுத்தல் நிகழ்வுகள், குற்றங்களும் தண்டனைகளும் எனும் தொணியில் கருத்தரங்குகள் செய்ய இந்தச் சபையின் இன்றைய அறிக்கையில் இணைத்து உரியவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என சபாநாயகருக்கு ஆலோசனை வழங்குகின்றேன். நாட்டின் பொருளாதாரம் உயர்வடைய எம்மைப் போன்ற இளைஞர்கள் பிரதிநிதிகளின் ஊடாக பல நல்ல திட்டங்களை மக்கள் மயப்படுத்தி செயற்படுத்த ஆலோசனை வழங்குகின்றேன். இங்குள்ள அனைவரும் மக்கள் பிரதிநிதிகள். எனவே இன்றைய தினத்தோடு இந்த நாடாளுமன்றம் கலைந்தாலும் எதிர்கால இலங்கைக்கான தேசிய இளைஞர்களை ஒன்றினைக்கும் செயற்குழுவாக செயற்பட அனைவரையும் அழைக்கின்றேன். இந்த உயர்சபையில் பல உறவுகள், புது அறிமுகங்கள் கிடைத்திருந்தன. இந்த சபையில் உள்ள அனைவருக்கும் நன்றிகள், உங்கள் சேவைகளுக்கு வாழ்துக்கள் கூறுகின்றேன்.அடுத்தடுத்து அமையும் நாடாளுமன்றம் வலுவானதாக அமைய வேண்டுமென வேண்டிக் கொள்கின்றேன்.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மகேசன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் பசிந்து குணரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.