ஏழை விவசாயிகளது வாழ்வாதாரத்தையே அரசு கூடுதல் கவனத்திலெடுக்கவேண்டும்! கோவிந்தன் கருணாகரம் வலியுறுத்து

 

நெல் விலை நிர்ணயத்தில், அரிசி ஆலை உரிமையாளர்கள் அழுத்தம் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாது ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் கவனத்திலெடுக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்ற வரவு – செலவுத் திட்ட அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

தோடர்ந்து உரை நிகழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா –

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வரவு – செலவுத்திட்டம் மூலமாக ஒதுக்கப்படும் நிதிகள் ஒதுக்கப்படாமல் நாங்கள் எந்தவித அபிவிருத்தி வேலைகளையும் எமது மக்களுக்குச் செய்யமுடியாத சூழ்நிலையில் இருந்து கொண்டு இந்த வரவு – செலவுத்திட்ட அலுவலகம் சம்பந்தமான விவாதத்தில் எப்படிப் பங்கு பெறலாம் என்று யோசிக்கின்றேன்.

இருந்தாலும் எனது மாவட்ட மக்கள் சம்பந்தமாக சில விடயங்களையும்; இந்த விவாதத்தில் எடுத்துரைக்கலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவதாக கடந்த 28.05.2023 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தவேந்திரன் மதுசுதன் என்ற 20 வயது மாணவண் இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரையான 23 கிலோமீற்றர் கடலை நீந்திக் கடந்திருக்கின்றார்.

ஒரு சாதனை புரிந்திருக்கின்றார். அதுவும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் கடலில் பிளாஸ்ரிக் கழிவுகள் அதிகரிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளையும், பின்விளைவுகளைத் தடுப்பதற்கும் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகா, சிறுவயதில தற்கொலைக்குச் செல்லாத மனோநிலையை வலுப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் சாதனைகளை நிறைவேற்ற வேண்டும என்ற சிந்தனையுடன் செயற்பட்டால் இவ்வாறான விடயங்களிலிருந்து விடுபடலாம் என்ற விழிப்புணர்வுகளுக்காக இந்த சாதனையைப் புரிந்துள்ளார்.

அந்தவகையில் இந்த நாடாளுமன்றத்தின் ஊடாக அந்த மாணவனுக்கு பாராட்டுக்களைச் தெரிவிக்கவேண்டிய கடமையிலிருக்கின்றேன்.

அது மாத்திரமல்ல இன்றைய விவாதத்தின் ஆராம்பத்திலே 27ஃ2 கேள்வியின் மூலமாக இந்தச் சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஒரு கூற்றை முன்வைத்திருந்தார். உண்மையிலேயே விவசாயிகள் சார்பாக நான் அவருக்கு பாராட்டுத் தெரிவிக்கிறேன்.

இன்று மட்டக்களப்ப மாவட்டம் மாத்திரமல்ல அம்பாறை போன்ற பிரதேசங்களிலும் நெல் அறுவடை ஆரம்பித்து விட்டது. ஆனால் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அவர்களுடைய நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் எவையும் நடைபெறவில்லை என்பது மாத்திரமல்லாமல் நெல்லுக்குரிய சரியான விலையைக் கூட இந்த அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.

இன்றைய 27ஃ2 கீழான கேள்விக்குக் கூட விவசாய அமைச்சர் அவர்கள் சரியான பதிலைக் கூறாமல் தாங்கள் கூடி முடிவெடுத்து அறிவிப்பதாகக் கூறியிருக்கின்றானர்.

இன்றைய பொருளாதார நிலைமையில் அரசாங்க விதை உற்பத்திப் பண்ணைகளில் கூட விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு கிலோ நெல்லை 95 ரூபாவுக்கு விற்ற பண்ணைகள், இன்று ஒரு கிலோ நெல்லை 200 ரூபாவுக்கு விற்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் இருக்கின்றது. ஏனென்றால் அதற்குரிய உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதாகக் கூறுகின்றனர்.

உண்மையில் உற்பத்திச் செலவு அதிகரிப்பதாக இருந்தால் அரசாங்க விதை உற்பத்திகளுக்கு மாத்திரமல்ல ஏழை விவசாயிகளுக்கும் அந்த உற்பத்திச் செலவு அதிகரித்திருக்கின்றது.

கிட்டத்தட்ட ஓர் ஏக்கர் நெல்வயல் செய்கை பண்ணுவதற்கு ஒரு லட்சத்து 25ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவு செய்யும் போது இன்றைய நெல்லின் விலை 75- 80ரூபாவுக்கு மேல் தாண்டவில்லை. எனவே இந்த அரசாங்கம் ஆகக்குறைந்தது நெல்லின் விலையை 120 ரூபாவுக்காவது நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாகப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே அவர்கள் அவர்களுடைய நெருக்கடியிலிருந்து மீள்வார்கள்.

ஒரு கிலோ அரிசி 200 ரூபாவுக்கு விற்கப்படுகின்ற நிலையில். அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லின் விலையை நிர்ணயிக்க முடியாது. அத்துடன் அரிசி ஆலை உரிமையாளர்கள் விலை நிர்ணயத்தில் அழுத்தம் கொடுக்கின்றார்கள். அரசாங்கம், அவர்களது ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாது ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கவனத்திலெடுக்க வேண்டும் என்பதுடன் அதற்காக பாடுபட வேண்டும்.

அத்துடன் கடந்த சில வாரங்களாக அதிபர் சேவைக்கான நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. ஆந்த அதிபர் சேவை போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் போது பல்கலைக்கழகப் பட்டம் அத்துடன் பட்டப் பின் கல்வி டிப்ளோமா இருக்க வேண்டும். அத்துடன் 5 வருட சேவைக்காலமும் இருக்க வேண்டும். அதைவிடுத்து கல்வியியல் கல்லூரி முடித்தவர்களுக்கு 6 வருட சேவை அனுபவம் இருந்தால் அதற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற சுற்றறிக்கை இருந்தது.

ஆனால் அந்த கல்வி டிப்ளோமா பட்டம், பட்டப்பின் டிப்ளோமா, விஷேட தேவைகள் சார் பட்ட பின் கல்வி டிப்ளோமா பெற்றவர்கள் அந்தப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தாலும் நேர்முகப் பரீட்சையில் அவர்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது மிகவும் துரதிஸ்டவசமானது. இலங்கை அதிபர் சேவை தரம் 3 இல் ஆட்சேர்ப்பு செய்வதற்காக பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இதில் சேவை நிபந்தனை பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான வர்த்தமானிப் பத்திரிகை அறிவித்தல் 2018.10.19 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதில் சேவை நிபந்தனை பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசின் இலக்கம் 1885ஃ31 மற்றும் 2014.10.22 ஆம் திகதி கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கும், அப்பிரமாணக்குறிப்பில் இதற்குப் பின்னர் மேற்கொள்ளும் திருத்தங்களுக்கும், அரச சேவையின் நியமனங்களை நிர்வகிக்கும் பொது நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரி இலங்கை அதிபர் சேவையின் 3 ஆம் தரத்திற்கு நியமிக்கப்படுவர்.

இந்த நியமனம் 2023 இலேயே வழங்கப்படவுள்ளது. எனவே பரீட்சை ஏலவே நடைபெற்றிருப்பினும், 202 3இற்கு முன்னர் அதிபர் சேவைப் பிரமாணக்குறிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அமையவே நியமனம் வழங்கப்படல் வேண்டும் என்பது நியதியாகும்.

இதன் அடிப்படையில் 2255ஃ55 ஆம் இலக்க 2021.11.26 ஆம் திகதிய அதி விஷேட வர்த்தமானி பத்திரிகையில் வெளியாகிய இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் 4ஆவது திருத்தத்தின் படி விசேட தேவைகள் சார் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் அமுல்படுத்தப்படும் திகதி குறிப்பிடப்படாமையால் இது 2014 ஆம் ஆண்டிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது நியதியாகும்.

மேலும் 2010 இல் விஷேட தேவைகள் சார் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவானது சாதாரண பட்டப்பின் கல்வி டிப்ளோமாவிற்கு சமமானது என கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையும் குறிப்பிடுகின்றது.

மேலும் திறந்த பல்கலைக்கழக உபவேந்தராலும் இது தெட்டத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நேர்முகப்பரீட்சை நடத்தி, அதன் அடிப்படையில் அவர்களையும் இலங்கை அதிபர் சேவைக்கு உள்வாங்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.