தொல்பொருள்கள் மரபுரிமைகள்மீது கைவைப்பதை தவிர்த்துக்கொள்க! சரத் பொன்சேகா அறிவுறுத்து

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஹிட்லரை போல் செயற்பட முயற்சிப்பது கவலைக்குரியது. அரசியல் நோக்கத்துக்காக தொல்பொருள் மரபுரிமைகள் மீது கை வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இல்லாவிடின் பாரிய விளைவு ஏற்படும். நாட்டை சீரழித்தவர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –

நாட்டை சீரழித்தவர்கள் தற்போது ஒன்றும் அறியாதவர்கள் போல் கருத்துரைப்பது வேடிக்கையாகவுள்ளது.

ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் ஆற்றிய உரை முழுமையாக செயற்படுத்தப்பட்டிருந்தால் நாட்டு மக்கள் சொர்க்கத்தில் வாழ்ந்திருப்பார்கள்.

நாட்டு மக்கள் ஒரு வேளை உணவை பெற்றுக்கொள்ளப் போராடுகின்ற நிலையில் பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என கனவு உலகில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி கருத்துரைக்கிறார்.

அமெரிக்காவில் டொலரின் பெறுமதி குறைவடைந்த போது தேசிய மட்டத்தில் ரூபாவின் பெறுமதி உயர்வடைந்தது. இதனை பொருளாதார மீட்சி என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். கடன் பெறுவதைத் தவிர எவ்வித பொருளாதாரக் கொள்கைத் திட்டங்களும் ஜனாதிபதியிடம் கிடையாது.

பாரம்பரிய அரசியல் முறைமையில் இருந்து விலகி தேசிய வளங்களைத் தனியார்மயப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். விடுதலைப் புலிகள் அமைப்புடன் நித கொடுக்கல் வாங்கல் செய்த நபருக்கு டெலிகொம் நிறுவனத்தை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அதற்கான பேச்சை பிரித்தானியாவில் ஆரம்பித்துள்ளார்.

கடன் பெற்று பொருளாதாரத்தை முன்னேற்றவும்,கடுமையான சட்டங்களை இயற்றி சமூகக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்தவும் ஜனாதிபதி முயற்சிக்கிறார். அரசியல்வாதிகளின் முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் ஊடகங்களை முடக்குவதற்காக ஒளி,ஒலி பரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் முறையற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஹிட்லரைப் போல் செயற்பட முயற்சிக்கின்றமை கவலைக்குரியது. தனது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக ஜனாதிபதி தொல்பொருள் மரபுரிமைகளில் கை வைக்கிறார். இது தவறானதொரு செயற்பாடாகும். இதனைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் பாரிய விளைவுகள் ஏற்படும்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களுடன் ஒன்றிணைந்து ஒருபோதும் செயற்பட முடியாது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒற்றை சங்கிலி பாலத்தில் நாட்டை கொண்டு செல்லவில்லை. ராஜபக்ஷர்களை தூக்கிக் கொண்டு செல்கிறார்.இவ்வாறானவர்களுடன் எவ்வாறு இணக்கமாக செயற்பட முடியும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.