வடக்கு, கிழக்கில் பௌத்த மேலாதிக்கம் இனமுரண்பாட்டை தோற்றுவிக்கும் செயல்! விநோனோகராதலிங்கம் காட்டம்

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பௌத்த மேலாதிக்கம் தீவிரமடைந்துள்ளது. தென்னிலங்கையில் ஆதிக்கம் கொள்வதற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவாதத்தை பேசி திரிகிறார்.

இவர்களை அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரத்தில் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ள நிலையில் அதற்கு அப்பாற்பட்ட வகையில் பௌத்த மேலாதிக்கம் செயற்படுவதால் நீதி கட்டமைப்பின் மீது சந்தேகம் எழுந்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விநோனோகராதலிங்கம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் நடைபெறுகின்றது. மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளரின் உரையில் இலங்கை தொடர்ந்தும் பொறுப்பு கூறலை உறுதிப்படுத்தாமல் தண்டனையில் இருந்து விடுபடும் போக்கு முடிவுக்கு கொண்டுவரப்படாமல், அலட்சியமாக செயற்படுகிறது என்று சுட்டிக்காட்டி கண்டித்துத்துள்ளமையைத் தமிழ் மக்கள் சார்பில் வரவேற்கிறோம்.

சர்வதேச விசாரணை பொறிமுறை விடயத்தில் தொடர்ந்தும் இலங்கை ஏமாற்றுமாக இருந்தால் அந்த பொறிக்குள் இந்த அரசாங்கம் அகப்படுவதை தடுக்க முடியாது என்பதையும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். ஐ .நா மனித உரிமைகள் ஆணையகம் கடந்த காலங்களில் எடுத்த முடிவுகளை நிறைவேற்றாது இலங்கை இருக்குமாக இருந்தால் அதற்கான தண்டனை நிச்சயமாக கிடைக்கும். அதற்கு நாங்கள் பக்க பலமாக இருப்போம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி அதற்கு பதிலளிக்கையில், இங்கே அனைத்தும் சுமுகமாக நடைபெறுகின்றன என்றும் இராணுவத்தினரிடம் இருக்கும் காணிகளில் 98 வீதம் விடுவிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் வன்னியில் 98 வீதமான காணிகள் இன்னும் இராணுவத்திடமே இருக்கின்றன.

சிறியளவிலான காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை மக்கள் இன்னும் மீளவும் குடியேறாது தவித்துக்கொண்டுள்ளனர். அரச படைகள் தேசிய பாதுகாப்பு என்ற ஒற்றை வசனத்தில் அங்கே இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

ஜனாதிபதி உரையாற்றும் போது பொய்களையே கூறுகின்றார். அதேபோன்று ஜெனிவாவில் உள்ள இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியும் பொய்களையே கூறுகின்றார். எவ்வாறாயினும் மனித உரிமைகள் ஆணையகத்தையோ, சர்வதேச சமூகத்தையோ எந்த வகையிலும் ஏமாற்ற முடியாது என்பதைக் கூறுகின்றேன்.

ஜனாதிபதி அடிக்கடி உரையாற்றுகின்றார். ஆனால் அவர் கூறுவனவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை. அரசியல் தீர்வு விடயத்தில் கடந்த சித்திரைக்கு முன்னர் தீர்வு எட்டப்படும் என்று கூறினார். ஆனால் இன்னும் அது நடைபெறவில்லை. நல்லாட்சி காலத்தில் இருந்து பிரதமராக இருக்கும் போதிருந்து கூறுகின்றார். ஒவ்வொரு தைப்பொங்கல்,தீபாவளி, புத்தாண்டில் தீர்வு என்று பொய் சொல்லி ஏமாற்றுகின்றார்.

தமிழ் மக்களுக்கென நிலையான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாதுள்ள நிலைமையில் இனவாதம் பேசி பௌத்த பிக்குகளுக்கு அப்பால் இந்த நாடாளுமன்றத்தில் உள்ள உதய கம்மன்பில, விமல் வீரவன்ஸ போன்றோர் தொடர்ச்சியாக இனவாத சிந்தனையுடன் பௌத்த மேலாதிக்கத்தை இந்த நாட்டில் மேலோங்கச் செய்யத் திட்டமிட்ட வகையில் அவர்கள் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

அரசாங்கத்தால் அந்த இனவாத குரல்களுக்கு எதிராக செயற்படவோ, அதனை அடக்கவோ முடியாத நிலைமையே இருக்கின்றது. தொடர்ச்சியாக இவர்கள் போன்றோர் இனவாதத்தை மக்கள் மத்தியில் கக்கிக்கொண்டிருக்கின்றனர். நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி குருந்தூர் மலையில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் முறையிட்டும் எங்களுக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது.

தொடர்ச்சியாக இந்த நிலைமை நீடிக்கப்படுமாக இருந்தால், வன்னி மாவட்டத்தில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தப்படுமாக இருந்தால், இது சிங்களவர்களுக்கு உரியது பௌத்த பூமி தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்துக்கு மட்டுமேயானது என்பதை நிறுவுவதற்காக திட்டமிடும் போது அங்கே மிகப்பெரிய இன முரண்பாட்டை வளர்ப்பதற்கு வழியேற்படுத்தப்படுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றேன்.

நாங்கள் நீதிமன்றத்தை நம்புகின்றோம், அதனை நாடியுள்ளோம். ஆனால் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாறாக பௌத்த மேலாதிக்கம் உயர்ந்து நிற்பதால் நீதிமன்றங்கள் தேவையா? அதனூடாக நீதி கிடைக்குமா? என்ற நிலைமை உள்ளது. –

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.