மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்கல் தொடர்பான கலந்துரையாடல்..

உலக உணவுத் திட்டத்தின் ஆதரவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்கல் நிகழ்ச்சி திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் (21) இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலக மற்றும் உலக உணவுத் திட்டப் பிரதி நிதிகளுக்கும் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் இடையிலான இக்கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில், 60 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, போஷாக்கான உணவுகளை வழங்கி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்போது செயற்படுத்தப்படும் திட்டத்தை மாவட்ட செயலகம் மேற்பார்வை செய்தல் மற்றும் முன்னேற்றுதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

விஷேடமாக சமைத்த பகலுணவு வழங்கலுக்காக உணவு விநியோகத்தர்களை அடையாளம் கண்டு, நிகழ்ச்சி திட்டத்தில் இணைத்துக் கொள்ளல், குறிப்பாக மரக்கறி உற்பத்தி, பண்ணைத் தொழில், போன்றவற்றில் ஈடுபடும் சுயதொழில் முயற்சியாளர்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்துதல தொடர்பாகவும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜதீஸ் குமார், ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளான நீல் அல்விஸ் மற்றும் ரஞ்சித் பிரசாத், உலக உணவுத் திட்ட பிரதிநிதிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.