எனது வீடு எரிக்கப்பட்ட மறுநாள் நான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்ற அழுத்தம் தரப்பட்டது! ஜனாதிபதி சர்ச்சை தகவல்

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது வீடும் நூலகமும் எரிக்கப்பட்ட மறுதினம் தன்னை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் அரகலயவிற்கு பின்னர் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் தொடர்பான எதிர்பாராத நிகழ்வுகளில் ஒரு பகுதியாக தனது வீடு எரிக்கப்பட்ட மறுநாள் தன்னை  பிரதமர் பதவியிலிருந்து  விலகுமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றினால் தூண்டப்பட்டவர்களே தனது வீட்டுக்குத் தீமூட்டினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கருத்தை அரகலய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆட்சிமாற்றம் குறித்து மிகவும் தீவிரமாக காணப்பட்ட ஒரு தருணத்தில் பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழுத்தம் கொடுத்தது யார் என்ற சர்ச்சை மூண்டுள்ளது.

அரசமைப்பிற்கு ஏற்ப சபாநாயகர் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

லண்டனில் சர்வதேச ஜனநாயக சங்கத்தின் 40 வருடபூர்த்தியை குறிக்கும் விதத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அக்காலப்பகுதியில் பல சர்வதேச தலையீடுகள் காணப்பட்டன என நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ஸ நூலொன்றில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையிலேயே பிரதமரின் ஜனாதிபதியின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓட்டமெடுத்த தருணத்தில் அமெரிக்க இந்திய தூதுவர் பிரதமர் பதவியிலிருந்து ரணில்விக்கிரமசிங்கவை  நீக்குமாறு கேட்டுக்கொண்டனர் என விமல்வீரவன்ஸ தெரிவித்திருந்தார்.

அவ்வேளை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனெரத் இரண்டு கடிதங்களை அனுப்பியிருந்தார். ஆனால் கோட்டாபய தனது இராஜினாமா கடிதத்தில் மாத்திரம் கையெழுத்திட்டார்.

இதன்காரணமாக அமெரிக்க தூதுவர் ஜூலிசங் சபாநாயகரை அழைத்து அவர் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் எனவும் விமல்வீரவன்ஸ தெரிவித்திருந்தார்.

எனினும் சபாநாயகர் அதனை ஏற்கமறுத்து பிரதமர் பொறுப்பை ஏற்பார் எனக் குறிப்பிட்டிருந்தார் எனவும் விமல்வீரவன்ஸ தெரிவித்திருந்தார்.

புத்தகத்தில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க தூதுவர் நிராகரித்திருந்தார்.

ஜனாதிபதி லண்டனில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மூலம்  விமல்வீரவன்ஸ தனது நூலில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை உறுதிசெய்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பெருமளவானவர்களை கொழும்பிற்கு கொண்டுவந்து ஜனாதிபதியின் இல்லத்திற்குள் வெற்றிகரமாக நுழைந்தனர். இதன் காரணமாக கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை கடற்படையின் கப்பலில் தப்பிச்சென்றார். அன்று மதியம் ஒன்றுகூடிய அனைத்து கட்சிதலைவர்கள் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் நான் ஜனாதிபதி பொறுப்பை ஏற்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் நான் பதவிவிலகவேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் நான் உறுதியாக இருந்தேன். அதனை ஏற்கமறுத்தேன். அரசமைப்பின்படி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவர் ஒருவர் பதவியேற்கவேண்டும் அதன் பின்னர் நான் பதவி விலகுவேன் எனத் தெரிவித்தேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் சில ஊடக நிறுவனங்களால் உந்தப்பட்டவர்கள் எனது வீட்டுக்குத் தீமூட்டினார்கள். நான் அதனால் பதவி விலகுவேன் எனக் கருதினார்கள். ஆனால் நான் உறுதியாக இருந்தேன். அடிபணிய மறுத்தேன்.

மறுநாள் நான் பதவி விலகவேண்டும் என்ற வேண்டுகோள் வெளியானது.  சிலர் சபாநாயகர்  பதவியேற்கவேண்டும் எனத் தெரிவித்தனர். நான் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து பதவியிலிருந்து விலகமறுத்தேன். – எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.