டெங்கு ஒழிப்புக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்!  விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம கோரிக்கை

இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிவதாகவும்  ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில்  47 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் உடலியல் நோய்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

எதிர்வரும் பருவகால மழைவீழ்ச்சியின் போது டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க  வேண்டியதன் அவசியத்தையும்  வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

தற்போது வரையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவில் டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர் எனவும் அங்குள்ள சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினருடன் இணைந்து கழிவுகளை அகற்றும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும்  ‘101 கலந்துரையாடல்’  நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

இந்நாள்களில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் தலையீட்டின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் டெங்கு ஒழிப்பு திட்டத்தை அரச, தனியார் துறைகள் பொதுமக்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

தொடர்ச்சியாக இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும்  இயலுமை காணப்படுகின்றது. எதிர்வரும் பருவகாலத்தைத் தொடர்ந்து டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும்.

பொதுவாக ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காண முடியும். அந்த வகையில் எதிர்வரும் நாள்களில் நோயாளர்கள் அதிகரிக்கக் கூடும் என்பதால் அனைத்து துறையினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் எனவும் தெரிவித்தார்.

டெங்கு நோய்  எந்த வயதினரையும் பாதிக்கும். பதிவாகும்  நோயாளர்களில் 75 சதவீதமானவர்கள்  15 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதற்கு முன்பாக சிறு பிள்ளைகள்  அதிகமாகப் பாதிக்கப்பட்டாலும் தற்போது இளைஞர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

டெங்கு என்பது ஒருவகை வைரஸ் ஆகும்.  டெங்கு நோயாளர்களை டெங்கு நுளம்புகள் கடிக்கும் பட்சத்தில் அந்த நுளம்பால் ஏனையவர்களுக்கு  டெங்கு நோய் பரவக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும். பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும்.

அதனால் டெங்கு கட்டுபாட்டிற்கு இந்தக் காரணங்கள் பற்றி அவதானம் செலுத்த வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.

முதலில் நுளம்புகள் பரவக்கூடிய பகுதிகளைத் தூய்மைப்படுத்துவது மிகவும் அவசியமாகும். தூய்மையான நீர் சேரும் பகுதிகளிலேயே டெங்கு நுளம்புகள் தங்கியிருக்கும். பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட பிளாஸ்டிக், டயர், பூச்சாடிகள் உள்ளிட்ட பொருள்கள் இருக்கும் இடங்களில் டெங்கு நோய் அதிகரிக்கும்.

முடிந்தளவிற்கு மேற்படி பகுதிகள் தொடர்பில் அவதானம் செலுத்தி  அவற்றை தூய்மைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.  அதேபோல் நுளம்பு கடியிலிருந்து தப்பிக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

டெங்கு நோய்க்கு இலக்கானவர்கள் மற்றையவர்களுக்கு பரவாமலிருக்கும் வகையில் நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்புப் பெற  வேண்டியது அவசியமாகும். அதற்காக உடலை முழுமையாக மறைக்கும் உடைகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான பூச்சி விரட்டித் திரவியங்கள் ஊடகாகவும் நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்.  எவ்வாறாயினும் இந்த முறைமைகள் 100 சதவீதம் பலன் தருபவை அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.

பிரதேச சபைகள், நகர சபைகள், பொது சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார பிரிவுகள், பாதுகாப்பு பிரிவுகளின் பங்களிப்புடன் நுளம்பு பெருகும் இடங்களைத் தூய்மைப்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

டெங்கு நோய் அதிகளவில் பரவும் மாகாணங்களை மையப்படுத்திய விசேட வேலைத்திட்டங்களும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நோயாளர்கள் பதிவாகும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில்  எதிர்வரும் வாரங்களில்  விசேட  வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அப்பகுதிகளில் காணப்படும் கழிவுகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும். அதற்காக இராணுவத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.

நீர் நிரம்பிய பாத்திரங்களில் நீரை அகற்றினாலும் குடம்பிகள் தங்கியிருக்கூடும். எனவே நீர் நிரம்பாத வகையில் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.  பொதுவாக ஐந்து அல்லது ஆறு நாள்கள் மாத்திரமே நுளம்புகள் உயிர்வாழும்.  அதனால் வாராந்தம் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்த வேண்டியது அவசியமாகும். நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அண்மித்த பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.  அதனால் நோய் கட்டுப்பாட்டை ஒருவரால் மாத்திரம் செய்துவிட முடியாது. இந்நாட்டில் அனைவரிதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் வலியுறுத்தினார்.

டெங்கு நோய்க்கு இலக்கானவர் எனின் கடினமான வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். ஓய்வெடுக்க வேண்டியது அவசியமாகும்.  அவ்வாறு இல்லாவிட்டால் நோயின் பாதிப்பு அதிகரிக்கும். காய்ச்சல் ஏற்படும் போது பெரசிடமோல் தவிர்ந்த ஏனைய மருந்துகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு காய்ச்சல் நோயாளிக்கும் வேறு மருந்துகளை வழங்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கவில்லை. சில நேரங்களில் பெரசிடமோல் மருந்தால் நோய் முழுமையாக குணமடையாமல் இருக்கலாம். அந்த சந்தர்பங்களில் நோயாளர்கள் அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை.  நோய் இருப்பதால் பாரிய பிரச்சினைகள் ஏற்படாது. ஓய்வெடுப்பதால் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ள முடியும். இளநீர், தேசிக்காய், தோடம்பழம், ஜீவனி உள்ளிட்ட திரவ வகைகளை உட்கொள்வது மிகவும் உகந்தது என்றும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.