முறையான தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த பரந்துபட்ட பேச்சுக்குத் தயார் ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு

தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த யோசனைகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு அவசியமாகும்.

எனவே முறையான தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த பரந்துபட்ட பேச்சுக்கு நாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் முறைமை தொடர்பான வேலைத்திட்டம் தம்வசம் காணப்படுவதாக தெரிவித்த அவர் , அதற்கமைய கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டால் குறுகிய காலத்துக்குள் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பாக யோசனைகளை இதுவரையில் நாம் பார்க்கவில்லை. ஆனால் இதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு எமது ஒத்துழைப்பு அரசாங்கத்துக்கு நிச்சயம் தேவை. தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் திருப்தியடைந்தால் மாத்திரமே எம்மால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.

நாம் இது தொடர்பில் ஆழமாக மதிப்பாய்வு செய்து பல மாற்று திட்டங்களை முன்வைத்துள்ளோம். ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்காது தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வது எவ்வாறு என்பதை நாம் அறிவோம். எனவே இவ்விடயம் தொடர்பில் பரந்துபட்ட பேச்சுகளை முன்னெடுப்போம்.

தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த யோசனைகள் சாதாரண மக்களுக்கு எதிர்மறையானதாகக் காணப்பட்டால் , அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எமக்கு மக்கள் சார்பில் முன்னிற்க வேண்டியேற்படும். காரணம் எதிர்க்கட்சியின் பிரதான கடமை மக்களுக்காக முன்னிற்பதாகும். இதிலிருந்து தப்பிச் செல்ல நாம் எண்ணவில்லை.

ஊழியர் சேமலாப நிதியத்துக்காகவும் , நிலையான பண வைப்பாளர்களுக்காகவும் , சாதாரண மக்களுக்காகவும் நாம் போராடுவோம். உண்மையில் தேசிய கடன் மறுசீரமைப்பை முறையாக நடைமுறைப்படுத்தினால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினரை பாதுகாக்க முடியும். எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு இதனை சரியான பாதையில் எம்மால் கொண்டு செல்ல முடியும். அத்தோடு இதனை சரியான முறையில் முன்னெடுத்துச் சென்றால் குறுகிய காலத்துக்குள் நாட்டைக் கட்டியெழுப்பவும் முடியும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.