அரசுக்குப் பாரிய நெருக்கடி ஏற்படும் பங்காளியான சந்திரசேன எச்சரிக்கை

அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்தில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன. ஏழ்மையில் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

குறைபாடுகள் விரைவாக திருத்திக் கொள்ளப்பட வேண்டும் இல்லாவிடின்  அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடி ஏற்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

சமுர்த்தி நலன்புரி செயற்திட்டம் அரசியல் நோக்கத்துக்காகவே வழங்கப்படுகிறது என எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது. அது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி நலன்புரி வழங்கல் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டது. தற்போது எதிர்க்கட்சியில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆட்சியில் இருந்த போது சமுர்த்தி நலன்புரி செயற்திட்டத்துக்கு எதிராக செயற்படவில்லை.

குறுகிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டே சமுர்த்தி நலன்புரி செயற்திட்டம் விமர்சிக்கப்படுகிறது. இவ்வாறான பின்னணியில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய அஸ்வெசும நலன்புரி செயற்திட்டம் சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்தில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன. ஏழ்மையில் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே, குறைபாடுகள் விரைவாக திருத்திக் கொள்ளப்பட வேண்டும் இல்லாவிட்டால் அது அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.