முல்லைத்தீவு மாவட்டத்தில் அஸ்வெசும திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்யுங்கள்! பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்ரவரன் கோரிக்கை

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசின் அஸ்வெசும திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மேன் முறையீடு செய்யுங்கள் என முல்லைத்தீவு மாவட்டத்தில் பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்ரவரன் தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவில் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை கேப்பாபிலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடி மாவட்ட செயலக வாயிலை மூடி கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டத்தில் பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்ரவரன், முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசின் அஸ்வெசும திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

முல்லைத்தீவு மாவட்டத்தில் 23ஆயிரத்தி 901 குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளாக இருந்துள்ளார்கள். அதில் 16 ஆயிரத்து 211 குடும்பங்களுக்கு சமூக நலன்புரிசபையின் நன்மைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனால் ஏற்கனவே சமுர்த்தி நன்மையை அனுபவித்த மக்கள் விடுபட்டுள்ளார்கள் மாற்றுவலுவுடையவர்கள் பெண்களை தலைமைத்துவமான குடும்பங்களுக்கும் விடுபட்டுள்ளார்கள் அவர்களிடம் இருந்து மேல் முறையீட்டைப் பெற்றுக்கொள்ளும் முகமாக கிராம அலுவலகர் அலுவலகங்களில் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோன்று ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் விசேடகரும பீடம் அமைக்கப்பட்டு மேன்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருப்பார்களாக இருந்தால் மேன்முறையீடுகளை மேற்கொள்ளலாம் இணையத்தளத்திலும் முறையிடலாம்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட பெயர் விவரத்தில் பல வசதியானவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அது தொடர்பிலான ஆட்சேபனையை பொதுமக்கள் நேரடியாகவே இணையத்தளம் ஊடாகவோ தெரியப்படுத்துவதன் ஊடாக மேன்முறையீட்டு சபை ஆய்வு மேற்கொண்டு தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களை உள்ளீர்க்ககூடியதாக இருக்கும்.

நலன்புரி சமூக நன்மைகள் குறிப்பிட்ட விதம் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களுக்கே கிடைக்கவுள்ளதால் தகுதியற்றவர்கள் உள்ளீர்க்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பான விவரங்கள் கிடைக்கப்பெறும் இடத்து ஆய்வு செய்து அவர்களை நீக்கி தகுதியானவர்களை உள்ளீர்ப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது.

எதிர்வரும் ஜூன்மாதம் 10 ஆம் திகதிவரை மேன்முறையீட்டை மேற்கொள்ளலாம் இன்னும் சில முறைப்பாடுகள் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

சில தகுதியான குடும்பங்கள் கூட சமூக நலன்புரிதிட்டத்தில் விண்ணப்பிப்பதற்குத் தவறிவிட்டுள்ளார்கள். அவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் மேன்முறையீடு செய்ய வாய்ப்புக்கள் இல்லாவிட்டாலும் எதிர்வரும் ஆவணி மாதம் அளவில் விடுபட்டவர்களுக்கான மேல்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பமும் இருக்கின்றது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நன்மை பெறமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.