எனது மகனை என்னிடமிருந்து பிரிக்கவேண்டாம் – அவுஸ்திரேலியாவை உலுக்கும் முள்ளிவாய்க்காலில் கணவனை இழந்த தமிழ் பெண்ணின் கதறல்

இலங்கையை சேர்ந்த டிக்ஸ்டன் அருள்ரூபனை அவரது தயாரிடமிருந்து பிரிக்கவேண்டாம் என அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு அவுஸ்திரேலியாவின் தமிழ் ஏதிலிகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

டிக்ஸ்டனின் 13 வயதில் அவரது தந்தை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்டார்.

டிக்ஸ்டனும்  அவரது தாயார் பேத்தியார் ஆகியோர் இலங்கையின் மிகவும் மோசமான இடைத்தங்கல் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டனர்.

முகாமிலிருந்து வீடு திரும்பிய பின்னர் தாயார் ரீட்டா வீட்டிற்கு சென்ற இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்குள்ளானார்.

இதன் பின்னர் தனது பாதுகாப்பை உறுதி செய்ய விரும்பிய அவர் மகனை தனது தாயாரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு 2012 இல் அவுஸ்திரேலியா தப்பிச்சென்றார்.

அவருக்கு நிரந்தரபாதுகாப்பும் வழங்கப்பட்டது, இதன் காரணமாக தனது மகன் தன்னுடன் இணையும் நாள் வரும் என்ற அவரது நம்பிக்கையும் அதிகரித்தது.

2016 இல் டிக்ஸ்டனின்  பேத்தியார் காலமானார் இதன் காரணமாக அவன் தனக்கு இருந்த ஒரேயொரு நெருங்கிய குடும்ப உறவையும் இழந்தான். ரீட்டா மகனை சட்டபூர்வமாக அவுஸ்திரேலியாவிற்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார் அந்த விண்ணம் நிராகரிக்கப்பட்டது.

எனினும் தனது தாயாருடன் சேர்வதற்காக டிக்ஸ்டன்  2019 இல் விமானம் மூலம் அவுஸ்திரேலியா சென்றார்.

எனினும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் குடிவரவு தடுப்புமுகாமில் தடுத்துவைத்தனர்.தொடர்ந்தும் அவர் அங்கேயே உள்ளார்.

கடந்த வாரம் அவர் இலங்கைக்கு விரைவில் நாடு கடத்தப்படுவார் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் துன்பகரமான கடந்தகாலத்திலிருந்து மீண்டு மீண்டும் இணைவதற்கும் அமைதியான வாழ்வை வாழ்வதற்கும் தாயும் மகனும் பெருவிருப்பம் கொண்டுள்ளனர்.

ஆனால் தற்போதைய நிலை பெரும் துயரத்தையே ஏற்படுத்துகின்றது.

ரீட்டாவின் ஒரேயொரு மகனை – அவரது குடும்பத்தில் எஞ்சியிருப்பவரை அவுஸ்திரேலிய அரசாங்கம் எந்த வித குற்றச்சாட்டையும் சுமத்தாமல் தடுத்துவைத்துள்ளது.ரீட்டாவின் கணவரின் கொலையாளியின் கரங்களிற்கு மகனை நாடு கடத்த அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

டிக்ஸ்டனை முதலில் அவுஸ்திரேலிய அரசாங்கம் குடிவரவு தடுப்புமுகாமிலிருந்து விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ் ஏதிலிகள் பேரவை இதன் மூலம் அவர் தனது தாயாருடன் இணைவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

தாயாரும் மகனும் போதியவு துன்பங்களை அனுபவித்துள்ளனர் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீள உருவாக்க அனுமதிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ள  ஏதிலிகள் பேரவை டிக்ஸ்டனை நாடு கடத்தும் திட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம்  கைவிடவேண்டும், அவரை முகாமிலிருந்து விடுதலை செய்து நிரந்தர பாதுகாப்பு விசாவை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.