தேசிய கடன் மறுசீரமைப்பின் முழு சுமைகளும் மக்கள்மீது சுமத்தப்பட்டதாலேயே எதிர்த்தோம் ஹர்ஷ டி சில்வா விளக்குகிறார்

தேசிய கடன் மறுசீரமைப்பின் முழு சுமையும் சாதாரண மக்கள் மீதே சுமத்தப்பட்டிருக்கிறது. அதனாலேயே நாடாளுமன்றத்தில் அதற்கு எதிராக வாக்களித்தோம் என ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை கோரும் பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிராக வாக்களித்தமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது. அதனால் செவ்வாய்க்கிழமையில் இருந்து சில வங்கிகளில் பங்குகளின் விலை அதிகரிக்கும் அதேநேரம் பிணைமுறி இருக்கும் நூற்றுக்கு 25, 30 வட்டி பெறுபவர்கள் அதிக லாபம் பெறுவார்கள்.

அடுத்தபடியாக அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு இணக்கம் தெரிவிப்பதா இல்லையா என ஊழியர் சேமலாப நிதியத்தின் 25 லட்சம் தொடர்பாக  எதிர்வரும் 21 நாளகளுக்குள் நிதியம் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது.

அதன் பிரகாரம் ஊழியர் சேமலாப நிதியம் கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்தால், ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுவரை நூற்றுக்கு 12 வீத வட்டியும் அதன் பின்னர் நூற்றுக்கு 9 வீத வட்டியும் வழங்க முயற்சிப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை. ஏனெனில் இதனை சட்ட ரீதியில் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டியேயே நாங்கள் இருக்கிறோம்.

அத்துடன் அரசாங்கத்தின் தேசிய கடன் மறுசீரமைப்பின் சுமையையும் இந்த ஊழியர் சேமலாப நிதியத்தின் மீதே சுமத்தி இருக்கிறது. அதனையே நாங்கள் எதிர்க்கிறோம். இந்த சுமை வங்கி உரிமையாளர்கள், செல்வந்தர்கள் என அனைவருக்கும் பிரிந்து செல்லும் வகையில் மேற்கொண்டால் அதில் நியாயம் இருக்கிறது.

அதனால் அரசாங்கத்தின் தேசிய கடன் மறுசீரமைப்பின் சுமையை முழுமையாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் மீது மாத்திரம் சுமத்தி இருப்பதையே நாங்கள் எதிர்க்கிறோம். அதனாலே அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிரத்து வாக்களித்தோம். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.