நிந்தவூர் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் திறந்து வைப்பு

 

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இடமாற்றப்பட்ட புதிய பொலிஸ் நிலையம் இன்று (புதன்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021.11.29 அன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டிருந்த நிந்தவூர் பொலிஸ் நிலையம் தற்போது கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி அமைந்துள்ள புதிய இடத்துக்கு மாற்றப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. எம் .நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய பொலிஸ் நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். எம். டி .ஜெயந்த ரத்னாயக்க, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக, நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி எம் .அப்துல் லத்தீப், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா, நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.றயீஸ் உட்பட சர்வமத தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இதன் போது அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி குறித்த பொலிஸ் நிலையத்தை இணைத்து அமைக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டு கூடத்தை பார்வையிட்டதுடன் டென்னிஸ் விளையாட்டிலும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பொலிஸ் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.