சர்வதேச கண்காணிப்புடன் கூடிய அகழ்வுப்பணி ஊடாகவே உண்மையை வெளிக்கொணரமுடியும்! அடித்துக்கூறுகின்றார் செல்வராசா கஜேந்திரன்

கொக்குத்தொடுவாய் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வுப்பணிகளை சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுப்பதன் ஊடாக மாத்திரமே உண்மையை வெளிக்கொண்டுவரமுடியுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்  தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் தண்ணீர் குழாய்களைப் பொருத்துவதற்காகக் கடந்த மாதம் 29 ஆம் திகதி நிலத்தைத் தோண்டியபோது மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் என்பன தென்பட்டதை அடுத்து, அந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கடந்த 30 ஆம் திகதியன்று அந்த இடத்தைப் பார்வையிட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிவான், அங்கு 6 ஆம் திகதியன்று வியாழக்கிழமை அகழ்வுப்பணிகளை ஆரம்பிக்குமாறும், அதுவரையில் அந்தப் பகுதியிலுள்ள மனித எச்சங்கள் சிதைவுறாதவண்ணம் பாதுகாக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்தச் சம்பவம் இப்பகுதியில் வாழும் மக்களிடத்தில் மாத்திரமன்றி ஒட்டுமொத்த தமிழ்மக்கள் மத்தியிலும் அச்சத்தைத் தோற்றுவித்திருப்பதாகவும், இது மற்றுமொரு மனிதப்புதைகுழியாக இருக்கக்கூடும் அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்ட நபர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அம்மக்கள் அஞ்சுகின்றனர் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இந்தப் பகுதி கடந்த 2009 ஆம் ஆண்டுவரை இராணுவக்கட்டுப்பாட்டிலேயே இருந்தது. கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் வாழும் மக்களை வெளியேறுமாறு 1984 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

‘அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் அப்பகுதி இராணுவக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது’ என்று கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அந்தப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், அவை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சடலங்களாகவோ அல்லது உயிருடன் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளின் உடல்களாகவோ இருக்கக்கூடுமென மக்கள் அஞ்சுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள அவர், எனவே சர்வதேசக் கண்காணிப்பின்கீழ் உரியமுறையில் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

‘இவ்விடத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய அகழ்வுப்பணிகள் இலங்கை அரசாங்கத்தால் மூடிமறைக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் சர்வதேச சமூகம் அதன் கரிசனையை வெளிப்படுத்தவேண்டும். இந்த அகழ்வுப்பணியை சர்வதேசக் கண்காணிப்பின்கீழ் முன்னெடுப்பதன் ஊடாக மாத்திரமே உண்மையை வெளிக்கொண்டுவரமுடியும் என்பதே எனது அபிப்பிராயமாகும்’ என்று கஜேந்திரன் எம்.பி.  தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.