நீதிமன்றக் கட்டமைப்புகளில் மாற்றம் அவசியம்: எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்!  வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி கோருகிறார்

நல்லாட்சி அரசாங்கம் நீதிமன்றக் கட்டமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்கிறோம். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வர புதிய பொறிமுறை செயற்படுத்தப்படும்.

சிறந்த மாற்றத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ‘நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான முதலீடுகள் போதுமானவையாக இல்லை என்று குறிப்பிடுகின்றமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக விசேட நிதி ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்ட திருத்தத்துக்காக 80  யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற நடவடிக்கைகளில் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த சிறந்த திட்டங்களை வினைத்திறனான முறையில் முன்னெடுத்துச் செல்கிறோம்.

நீதிமன்ற நடவடிக்கைளை டிஜிற்றல் மயப்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

நீதிமன்றக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு சிறந்த நிலைக்கு செல்ல வேண்டும். குறைப்பாடுகளை மாத்திரம் விமர்சித்துக் கொண்டிருந்தால் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. பல நெருக்கடியான சூழலில் நீதிபதிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு அமைய உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றக் கட்டமைப்பின் முன்னேற்றத்தால் பொதுமக்கள் பயனடைகிறார்களா என்பது குறித்து ஆராய வேண்டும்.

நீதிமன்ற விசாரணைகளின் முறைமை மாற்றியமைக்க வேண்டும்.வணிக மேல் நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைகள் அதிகரித்துள்ளன. ஆகவே, வணிக மேல் நீதிமன்றங்களின் விசாரணைகளை விரைவுப்படுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஆகவே நாட்டுக்காக நீதிமன்றக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும்.

ஒரு வழக்கை விசாரணை செய்யும் நீதிபதி அந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நடைமுறையில்  ஏற்படுத்தா விட்டால் நீதிமன்றக் கட்டமைப்பில் ஒருபோதும் மாற்றம் ஏற்படுத்த முடியாது. ஆகவே, நீதிமன்ற கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.