இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருளை கொண்டுசேர்ப்பது முக்கிய பிரமுகர்களாவர்! ஹரீஸ் எம்.பி. சுட்டிக்காட்டு

(அபு அலா)

எதிர்காலத்தைச் சீரழிக்கும் நோக்கில் திட்டமிட்டு மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்தும் பணியில் இளைஞர்கள் தாமாக முன்வந்து பணியாற்ற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

போதையையும், போதைப் பாவனைகளையும் எமது நாட்டில் இல்லாதொழிப்பதால் எமது எதிர்கால சந்ததியினரை ஒழுக்கமுள்ளவர்களாகவும், அவர்களின் எதிர்காலத்தை சிறந்ததாகவும் உருவாக்கலாம். அதனால் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுடன் எமது இளைஞர்கள் சுயமாக இணைந்துகொண்டு செயற்பட முன்வந்தால் மட்டுமே இதை இல்லாதொழிக்க முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் சுட்டிக்காட்டினார்.

அட்டாளைச்சேனை – பாலமுனை பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் –

கிழக்கு பிராந்தியத்தில் போதைப்பொருளை அறிமுகப்படுத்தி இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள், முக்கிய பிரமுகர்கள் இருக்கின்றனர் என்று போதையொழிப்புக்குப் பொறுப்பாக இருக்கும் அதிகாரி தெரிவித்தார். இதைக்கேட்டு நான் அதிர்ச்சிக்குள்ளானேன்.

கிழக்கு பிராந்தியத்தில் கல்வி, ஒழுக்கம் என்பவற்றை சீரழிக்க இந்த மோசமான பழக்கத்தை தமிழ், முஸ்லிம் இளைஞர்களிடம் உருவாக்க நாட்டிலிருந்த சில முக்கிய பிரமுகர்கள் காரணமாக இருந்தார்கள் என்ற அதிர்ச்சியான உண்மையையும் அந்த அதிகாரி எனக்கு தெரிவித்தார்.

இந்த ஆபத்திலிருந்து எமது இளைஞர்களையும், நாளைய தலைமுறையையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எம் எல்லோருக்கும் இருக்கின்றது. இந்த நிலைமையை மாற்றியமைக்க எங்களால் முடியுமானளவு பல முயற்சிகளைச் செய்து வருகின்றோம்.

இப்போது இளைஞர்களும் முன்வந்து இதுதொடர்பான விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய அவசியமுள்ளதையும் உணர்கின்றோம். சிவில் அமைப்புக்கள் இந்த வேலைத்திட்டத்தில் தங்களின் பார்வையை செலுத்த வேண்டியது மிக அவசியமாகிறது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.