நிதி வங்குரோத்து நிலை தொடர்பான தெரிவுக்குழு: பஷில், கப்ராலை  உறுப்பினர்களாக  நியமியுங்கள்! ஹர்ஷன ராஜகருண சபாநாயகருக்கு ஆலோசனை

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய்வதற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழு தொடர்பில் மக்கள் மத்தியில் கடும் விமர்சனம் காணப்படுகிறது.

தெரிவு குழு நியமனத்தில் இடம்பெற்றுள்ள தவறை திருத்திக் கொள்ளுங்கள் அல்லது பஷில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோரை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்து அவர்களை நிதி வங்குரோத்து நிலை தொடர்பான தெரிவுக் குழுவின் உறுப்பினர்களாக நியமியுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய்வதற்கு துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் விசேட தெரிவுக் குழுவை நியமியுங்கள் என நாங்களே வலியுறுத்தியுள்ளோம்.

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய்வதற்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழு மற்றும் தலைவர், உறுப்பினர்கள் தொடர்பில் எம்மால் திருப்தியடைய முடியாது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் தெரிவுக்குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு உரித்தாக்கப்பட வேண்டும். பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்  இந்தத் தெரிவுக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள் அல்லது முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ,மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோரை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்து அவர்களை நிதி வங்குரோத்து நிலை தொடர்பான தெரிவு குழுவின் உறுப்பினர்களாக நியமியுங்கள் அதுவே பொருத்தமானதாக அமையும் மக்களும் ஏற்றுக்கொள்வார்கள். – என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ஜனாதிபதியுடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பேச்சின் போது நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய வேண்டும். இல்லாவிடின் இந்தப் பிரச்சினை எதிர்காலத்திலும் தோற்றம் பெறும்,வீடுகளும் தீக்கிரையாக்கப்படும் என்றோம்.

பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்  மற்றும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழு தொடர்பில் மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

தெரிவுக் குழுவின் தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குங்கள் என நாங்கள் கோரவில்லை.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு வழங்குமாறு வலியுறுத்துகிறோம். பொருளாதார துறை தொடர்பில் அறிவு உள்ளவர்களை தெரிவு குழு உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.