ஹெரோயின் கடத்தல் வழக்கு – 6 வருடங்களின் பின் யாழைச் சேர்ந்த குடும்பஸ்தருக்கு மரண தண்டனை – நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு

ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்து பிணையில் விடுவிக்கப்பட்டவருக்கு எதிராக 6 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று (12) மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதி மன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனால் குறித்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த நாளன்று இரவு 8.30 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்துகள் சோதனையிடப்பட்டன.

இதன்போது, பேருந்து ஒன்றில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் அவரது உடமையில் வைத்து ஹெரோயின் கடத்திச் சென்றமை பொலிஸரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த குடும்பஸ்தரும் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரிடம் இருந்து ஒரு கிலோ 135 கிராம் நிறை உடைய கலப்படம் அற்ற தூய ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து, குறித்த நபரின் வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஒரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காகக் கொண்டு சென்றமை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு, அரச சட்டத்தரணிகளான தர்சிகா, திருக்குமாரன் மற்றும் ஆறுமுகம் தனுஜன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

குறித்த வழக்கு விசாரணைகளில் குறித்த நபர் ஒரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக எடுத்துச் சென்றமை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டமையால் குறித்த நபருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற 55 வயது குடும்பஸ்தருக்கே 6 வருடங்களின் பின் இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.