ஐந்து நாளாகத் தொடரும் சத்தியாகிரகப் போராட்டம்: டெங்கு தடுப்பு உதவியாளர்களுக்கு ஆதரவாக ஹரீஸ்!

 

நூருல்{_ஹதா உமர்

டெங்கு தடுப்பு உதவியாளர்களின் நிரந்தர நியமன கோரிக்கை நியாயமானது. உங்கள் பிரச்சினைகளைப் பற்றி ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சருடன் பேச்சு நடத்தத் தாம் தயாராக இருப்பதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

அனைத்து இலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கத்தின் கல்முனை பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள், கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிவரும் தங்களை நிரந்தர ஊழியர்களாக்குமாறு கோரி காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்னால் போராட்டமொன்றை ஆரம்பித்த நிலையில், இன்றும் ஐந்தாவது நாளாக போராட்டம் தொடர்கிறது. இவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு டெங்கு தடுப்பு உதவியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்காலிகமாக பந்தல் அமைத்து, சுலோகங்களை ஏந்தியவாறு சத்தியாகிரக முறையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து இலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கத்தின் கல்முனை பிராந்திய தலைவர் கூறுகையில் –

கடந்த பல வருடங்களாக டெங்கு தடுப்பு உதவியாளர்களாக கடமையாற்றும் எங்களை அரசால் நிரந்தரமாக நியமிக்க முடியாமல் இருக்கிறது. எங்களுக்கான நிரந்தர நியமனம் சுகாதார அமைச்சின், சுகாதார திணைக்களத்தின் கீழ் வழங்கப்பட வேண்டும். தினம் 730 ரூபா அளவில் கிடைக்கும் சம்பளம் இப்போதைய நாட்டின் நிலைமைக்கு போதாமல் இருக்கிறது.

ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் பல்வேறு முக்கிய அதிகாரிகளுக்கு எங்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும், இதுவரை எங்களுக்கான தீர்வு கிட்டவில்லை. விரைவில் அரசாங்கம் எங்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அத்தோடு, நிரந்தர நியமனம் தொடர்பில் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இவர்களின் பிரச்சினைகளை நன்றாகக் கேட்டறிந்த திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், தானும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து இந்தப் பிரச்சினையை உரியவர்களிடம் எடுத்துரைத்து டெங்கு தடுப்பு உதவியாளர்களின் நிரந்தர நியமனத்துக்குத் தேவையான அழுத்தங்களை வழங்க உள்ளதாகத் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.