பெரமுனவுடன் ஒன்றிணைய டலஸ் அணி கோரிக்கையாம்! திலும் அமுனுகம போட்டுடைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் இணைந்துகொள்ள டலஸ் அழகபெரும தலைமையிலான அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விலகி சென்றவர்கள் தாராளமாக எம்முடன் இணைந்து கொள்ளலாம் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியை எதிர்கொண்ட போது தமது எதிர்கால அரசியலைக் கருத்திற்கொண்டு பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஒரு தரப்பினர் ஹெலிகொப்டர் சின்னத்தில் அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.

ஹெலிகொப்டர் சின்னத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடவில்லை. கூட்டணி பிளவடைந்துள்ளது.

எம்மை விட்டு விலகி சென்ற டலஸ் அழகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையினர் மீண்டும் எம்முடன் ஒன்றிணைய கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

விலகிச் சென்றவர்கள் தாராளமாக எம்முடன் மீண்டும் ஒன்றிணையலாம். சவால்களுக்கு மத்தியிலேயே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தோற்றம் பெற்றது.

ஆகவே எதிர்வரும் காலங்களில் தோற்றம் பெறவுள்ள சவால்களையும் சிறந்த முறையில் வெற்றி கொள்வோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எமக்கும் இடையில் அரசியல் ரீதியில் வேறுபாடு காணப்படலாம். நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருந்த வேளை சவால்களை தைரியமாக வெற்றிகொண்டார்.

ஆகவே, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.