மேலும் இருவருக்கு ஒவ்வாமை ; தடுப்பூசி தற்காலிகமாக நீக்கம் சுகாதார அமைச்சு நடவடிக்கை

பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உயிரிழந்த யுவதிக்கு ஏற்றப்பட்ட தடுப்பூசியை செலுத்திய மேலும் இருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், குறித்த தடுப்பூசியை பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேற்படி யுவதியின் மரணத்துக்கான உறுதியான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள் பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

நாம் கண்டறிந்த விடயங்கள் மற்றும் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து எவ்வாறு எதிர்காலத்தில் செயற்படுவது என்பது தொடர்பாக சகல விடயங்களையும் உள்ளடக்கி செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

சில சந்தர்ப்பங்களில் சில மருந்துகளுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அவ்வாறு ஒவ்வாமை வைத்தியசாலைகளில் ஏற்பட்டால் ஒவ்வாமையிலிருந்து காப்பாற்ற முடியும். சிலவேளைகளில் எம்மால் அவ்வாறு செயற்பட முடியாது. அந்த நிலைமையே பேராதனை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ளது. இது துரதிஷ்டமான சம்பவமாகும். இருப்பினும் நாம் இதனை சாதாரண விடயமாக நினைக்கவில்லை.

அந்த யுவதிக்கு ஏற்றப்பட்ட அதே வகையான தடுப்பூசி கண்டி போதனா வைத்தியசாலையில்  பயன்படுத்திய மேலும் இரு நோயாளர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பேராதனை மற்றும் கண்டி போதனா வைத்தியசாலைகள் உட்பட நாட்டின் ஏனைய வைத்தியசாலைகளுக்கு 10 தொகுதிகளுக்கும் அதிகமான மருந்துப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

முழுமையாக அந்த மருந்துகளை அகற்றியுள்ளோம். அதனை நாம் பயன்படுத்தப் போவதில்லை. அதற்காக புதியதொரு மருந்தையே பயன்படுத்த எதிர்பார்த்துள்ளோம். புதிய மருந்தையே நாம் தற்போது பயன்படுத்துகிறோம். சோதனைகளின் போது தவறுகள் இடம்பெறலாம். அதனை நாம் மறுக்கவில்லை. மருந்து இறக்குமதி செய்த பிறகு அது தொடர்பில் பரிசோதிக்கும் முறைமை எம்மிடமுள்ளது. அதனையே நாம் தற்போது முன்னெடுத்துள்ளோம். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.