மக்கள் பிரச்சினைக்காக நாங்கள் முன்செல்கின்றதால் செல்வாக்கிழக்கும் அரசியல்வாதிகள் சதிசெய்கிறார்கள்! அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் காட்டம்

 

நூருல் ஹூதா உமர்

எங்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நலிவடைந்து வரும் அரசியல் சக்திகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. நாங்கள் போதைப்பொருள் கடத்தியோ வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி மக்களை ஏமாற்றியோ பிழைப்பு நடத்துபவர்கள் அல்லர். பாடசாலை விடயமொன்றுக்காக முன்வந்து பெற்றோர்களுடன் இணைந்து நீதி கேட்டவர்கள். எங்களின் மீது வீண் பழியை சுமத்தி கைது செய்ய எத்தணிப்பது நடக்காது என்று அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர் –

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு இல்லாமையால் நிதி கையாள முடியாமல் இருக்கிறது. அதனால் பாடசாலை மின்சாரம், நீரிணைப்பு என்பன துண்டிக்கப்பட்டு பெண் பிள்ளைகள் தமது அவசர தேவைகளை நிறைவேற்றக் கூட முடியாமல் உள்ளது என்ற பெற்றோர்களின் குரலுக்கு நாங்கள் நீதி கேட்டே அங்கு நாங்கள் குரல் எழுப்பினோம். இரவில் ஆடிவிட்டு பகலில் தூங்கும் அவர்களுக்கு மாணவர்களின் பிரச்சினைகளைப் பற்றித் தெரியாது.

அக்கரைப்பற்று தேசிய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுக் கூட்டம் அதன் குழுவின் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காகக் கூடிய போது தேசிய காங்கிரஸின் பிரதேச முக்கியஸ்தர்கள் மூன்று, நான்கு பேர் வந்து கூட்டத்தைக் குழப்பிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த தாய்மாரும், குழப்பவாதிகளை அங்கிருந்து அகற்றிவிட்டு கூட்டத்தை நடத்துமாறு அதிபரை வேண்டினர். குழப்பவாதிகள் அங்கு கூறிய கருத்துக்களுக்கு வலயக்கல்வி அலுவலக பிரதிநிதியாக வருகைதந்த அதிகாரி பதிலளித்து அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்பதை நிரூபித்தார். இவர்கள் தொடர்ந்தும் பழைய மாணவர் அமைப்பின் கூட்டத்தையும் குழப்புகிறார்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு கூட்டத்தையும் குழப்புகிறார்கள் இவர்களின் நோக்கம் என்ன? இந்த அமைப்புக்களில் அவர்களும் இணைய விரும்பினால் முறையான அனுமதிகளைப் பெற்று இணைந்து பாடசாலையை மேம்படுத்தலாம். அப்படியெல்லாமல் குழப்புவதன் மூலம் எதை அடைய முயற்சிக்கிறார்கள். இந்தக் குழப்பல் திட்டமிடல்களுக்கு பின்னால் தேசிய காங்கிரஸின் முக்கிய செயலாளர் ஒருவர் இருக்கிறார்.

அன்றும் இவர்களால் வாக்குவாதம் நடைபெற்றது பின்னர் நிர்வாக தெரிவின்போதும் வாக்குவாதம் நடைபெற்றது. நான் அப்போது மேடையில் அமர்ந்திருந்தேன். நானும் சில பெற்றோர்களும் குழப்பவாதிகளைத் தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடொன்றை செய்துவிட்டு அதில் ஒருவர் வைத்தியசாலைக்கு சென்று விடுதியில் இருக்கிறார் என அறிந்துகொண்டேன். உங்களுக்கு ஒன்றுமில்லை வீட்டுக்கு செல்லுங்கள் என்று மருத்துவர்கள் கூறியும் அவர் வைத்தியசாலையில் இருந்திருக்கிறார்.

அங்கு கைகலப்புக்கள் எவையும் நடக்கவில்லை என்பதை கூட்டத்தில் கலந்து கொண்டிந்த அதிபர், பெற்றோர்கள் சத்திய கடதாசியை பொலிஸூக்கு வழங்கியுள்ளார்கள். முறையான அழைப்பாணை கிடைக்கும்போது எங்களின் வாக்குமூலம் வழங்க நாங்கள் தயாராக இருப்பதாக பொலிஸுக்கு அறிவித்திருந்தோம். அதனடிப்படையில் சம்பவம் தொடர்பில் பொலிஸுக்கு வாக்குமூலம் வழங்க சென்ற இரு பெற்றோரை பொலிஸ் கைது செய்து கைதானவர்களை மறுநாள் காலைதான் நீதிமன்றுக்கு ஆஜர் படுத்தியதென்றால் பின்னணியில் உள்ள அரசியல் சக்தி யார் என்பதை எல்லோரும் அறிவர். அக்கரைப்பற்றில் நாளுக்கு நாள் செல்வாக்கிழந்து நலிவடைந்து செல்லும் அரசியல்வாதி ஒருவர் இருக்கிறார்.

நீர்வழங்கல் காரியாலய இடமாற்றத்தின் போதும் நாங்கள் மக்களின் பக்கம் நின்று வீதிக்கு இறங்கிப் போராடினோம், பள்ளிவாசல் காணியை மீளப்பெற வேண்டிய போது அவர்களுக்கு விளங்கும் பாஷையில் எடுத்துக்கூறி அந்தக் காணியை மீட்டெடுத்தோம். கொரோனா காலத்தில் களத்தில் நின்ற அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தை கலைக்க முற்பட்டார். வைத்தியசாலை நிர்வாகத்தை சீரமைத்த போதும் அவர் குறுக்கிட்டார். எனது தொழிலை முடக்க அனைத்து வேலைத்திட்டங்களையும் செய்தார். கற்பினிகளுக்கான சிகிச்சை நிலையத்தை களஞ்சியமாக்க எத்தணித்தார். இவற்றையெல்லாம் செய்ததும் அவரே. அவரின் பழிவாங்களுக்கு முகங்கொடுத்து பழகியவர்கள் நாங்கள். மக்கள் இவர்களை பற்றி நன்றாக அறிந்துள்ளார்கள். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.