18,000 தற்காலிக சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க விசேட குழு!  சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய கூறுகிறார்

டெங்கு ஒழிப்புப் பிரிவு ஊழியர்கள் உட்பட அரச சேவையில் பல துறைகளில் சேவையில் உள்ள 18 ஆயிரம் தற்காலிக சேவையாளர்களுக்கு  நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு ஊழியர்கள் உட்பட  அரச சேவையில்  பல துறைகளிலும் உள்ள தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டு பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன்  இவ்விடயம் தொடர்பில் நான்கு அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தற்காலிக சேவையாளர்களுக்கு சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய  குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  18 ஆயிரம் ஊழியர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்  பல்வேறு துறைகளில் காணப்படுவதுடன் அவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத்தில் கூடி இறுதித் தீர்வு ஒன்றை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இது ஓர் அரசியல் பிரச்சினையல்ல. இது ஒரு மனிதாபிமான பிரச்சினை என்பதால் அந்த நோக்கத்தில் இந்தப் பிரச்சினை பார்க்கப்படும். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதில் நான் உட்பட அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம். – என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.