13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ரணிலுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை!  சாகர காரியவசம் இடித்துரைப்பு

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலேயே தற்போதைய ஜனாதிபதி அதிகாரத்தில் உள்ளார் எனத் தெரிவித்துள்ள சாகர காரியவசம், முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் நடைமுறைப்படுத்தாத 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தார்மீக உரிமை ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

பலவந்தமாக 13 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்த்தன, நாடாளுமன்றத்தில் அதற்கு ஆதரவளித்த ரணசிங்க பிரேமதாஸ, டிபி விஜயதுங்க அதிகாரங்களை பரவலாக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் ஆட்சிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் முஸ்லீம் கட்சிகளின் வலுவான ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த  மைத்திரிபால சிறிசேன ஆகியோர் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை என சாகரகாரியவசம் மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

புலனாய்வு தகவல்கள் போன்றவற்றின் மூலம் அவர்கள் அதனை நடைமுறைப்படுத்தாமல் விட்டமைக்கான கடுமையான காரணங்கள் இருக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ள பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் ஆகவே ரணில்விக்கிரமசிங்க இந்த காரணங்களை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும், அந்த காரணங்கள் இன்னமும் நீடிக்கின்றனவா என்பதை கண்டறிவதற்காக புலனாய்வு அமைப்புகளின்; அறிக்கைகளை பெறவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தையே தற்போது ரணில் விக்கிரமசிங்க அனுபவிக்கின்றார்  அதிகாரப்பரவலுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக நாடு ஸ்திரமற்ற நிலையில் காணப்பட்டவேளை அதிகாரப்பரவலுக்காக மக்கள் எங்களிடம் அதிகாரத்தை வழங்கவில்லை கோட்டாபய ராஜபகஷ தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதாக உத்தரவாதம் அளித்தார். 69 லட்சம் மக்கள் அவருக்காக வாக்களித்தனர.; நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினர். ஆகவே எவரும் மக்களின்  எதிர்பார்ப்பிற்கு எதிராக செயற்படமுடியாது. இதன் காரணமாகவே நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அதற்கான தார்மீக அதிகாரமில்லை எனத் தெரிவிக்கின்றோம் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய அவசியமிருந்தால் அவர் தேர்தலை நடத்தலாம். 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போகின்றேன் என மக்களிடம் தெரிவிக்கலாம். மக்கள் அதனை ஏற்றுக்கொண்டால் அவர்கள் ரணில்விக்கிரமசிங்கவை பதவிக்கு கொண்டுவருவார்கள். ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாங்கள் இதனை தெரிவித்துவிட்டோம் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.