இறை நோக்கில் காலத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது! இஸ்லாமிய புதுவருட நிகழ்வில் முப்தி சாஜித் அலி.

நூருல் ஹூதா உமர்

இறைவன் தன்னுடைய புனித நூலான அல் குர்ஆனில் காலத்துக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில், பல்வேறு இடங்களில் காலத்தின் மீது சத்தியமிட்டுள்ளான். இதனூடாக எங்களை விட்டுச் செல்லும் காலத்தின் அவசியத்தையும் அந்த அந்த நேரங்களில் நாங்கள் கடைபிடிக்க வேண்டிய விடயங்களையும் அல்லாஹ் எங்களுக்கு நேரடியாக வலியுறுத்தியுள்ளதாக முப்தி ஏ.எல்.எம். சாஜித் அலி தெரிவித்தார்.

பிறந்துள்ள இஸ்லாமிய புதுவருட தினமான (முஹர்ரம்) 1445 ஐ வரவேற்று, சம்மாந்துறை அல் ஹம்றா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அல் ஹம்றா வித்தியாலய அதிபர் ஏ..முகம்மட் றிஸ்வான் தலைமையில், பாடசாலை முற்றிலில்; மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய முப்தி சாஜித் அலி –

கொண்டாட வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கத்தக்கனவாக எங்களில் அநேகர் தேவையற்ற விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றோம். இன்று நான் கற்ற இந்த பாடசாலையில் இவ்வாறானதொரு நிகழ்வு நடைபெறுவதையிட்டு மிகவும் பெருமிதம் அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் எல்லா இடங்களிலும் இடம் பெற வேண்டும். இது ஓர் அரச நிகழ்வாக இடம்பெறுவது இன்னும் பெருமிதமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

பாடசாலை மாணவி ஒருவர் இஸ்லாமிய வாழ்வுடன் சம்பந்தப்படுத்தி தாலாட்டு ஒன்றைப் பாடி சபையோரை மகிழ்வித்தார். நிகழ்வின்போது பாடசாலை திட்ட இணைப்பாளர் எம்.வி.எம்.யூசுப், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.எல்.எம். பைரோஜி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் என பலரும் பங்கு கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.