தென்னாசியாவில் முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் அறிவுசார் வரலாறு’ தொடர்பான விருந்தினர் விரிவுரை!

 

மாளிகைக்காடு நிருபர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானங்கள் துறையின் வரலாற்றுப் பிரிவு தென்னாசியாவில் முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் அறிவுசார் வரலாறு தொடர்பான விருந்தினர் விரிவுரை கலை கலாசார பீடத்தின் கலை அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலை கலாசார பீடத்தின் அனைத்துத் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் பிரதம அதிதியாக பங்கேற்றதுடன், கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் மற்றும் பீடத்தின் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்;. வரலாற்றுப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரும் சமூக விஞ்ஞானங்கள் துறையின் முன்னாள் துறைத் தலைவருமான கலாநிதி அநூஷியா சேனாதிராஜா வரவேற்புரையை வழங்கினார். தொடர்ந்து கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் நிகழ்வு தொடர்பான அறிமுகத்தையும் கருத்தாடல் சம்பந்தமான புலமைசார் ஆரம்பத்தையும் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் பிரதம அதிதி உரையை நிகழ்த்தினார். மேலும் பல்கலைக்கழகங்களில் இவ்வாறான கல்வி மற்றும் ஆய்வு ரீதியான கருத்தாடல்கள், விரிவுரைகளின் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன் உலக நாடுகளின் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

தென்னாசியாவில் முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் அறிவுசார் வரலாறு தொடர்பான விருந்தினர் விரிவுரை பிரதான நிகழ்வாக இடம்பெற்றது. இந்நிகழ்வின் வளவாளராக இந்தியாவின் மொஹாலி பஞ்சாப்பின் அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய நிறுவனத்திலிருந்து மனிதநேய மற்றும் சமூக விஞ்ஞானங்கள் துறையின் தலைவரும் இணைப் பேராசிரியருமான கலாநிதி வி. ராஜேஷ் விரிவுரையை ஆய்வுக் கண்ணோட்டத்தில் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் ஏறத்தாழ 200இற்கு மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.

இந்தியாவின் முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் வரலாற்றை ஆய்வு ரீதியில் முன்வைத்த வளவாளர், இலங்கையின் முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் சம்பந்தமான தேடலின் அவசியத்தையும் எடுத்துரைத்தமை சிறப்பிற்குரியது. இந்நிகழ்வை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் இணைந்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும். முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் வரலாறு தொடர்பான அறிவைப் பெறும் வகையில் வினா, விடைக்கான நேரம் ஒதுக்கப்பட்டதுடன் மாணவர்கள் அதிகளவான பயன்களைப் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.\

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.