கைத் தொலைபேசிகளைத் திருடி விற்பனைசெய்யும் கும்பல் சிக்கியது

பாறுக் ஷிஹான்

நீண்ட காலமாக கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தொலைபேசிகள் சூட்சுமமாகக் களவாடி செல்லப்பட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்களை பொலிஸ் விசேட பிரிவின் தகவல் ஒருங்கிணைப்பிற்கமைய திங்கட்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.

இந் நடவடிக்கையில் கைதாகிய 2 சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டு ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸாரால் விசாரணைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விசாரணையின் போது கைதானவர்களின் வாக்குமூலத்தின் படி வைத்தியசாலைகள், நோயாளிகள், பார்வையாளர்கள் ஆகியோரை பிரதானமாக இலக்கு வைத்து சக நோயாளர்களாகவும் சிற்றுழியர்களாகவும் நடித்து சூட்சுமமாக இந்தக் கைத்தொலைபேசிகளை திருடியுள்ளனர்.

மேலும் குறித்த திருட்டு சம்பவத்தில் தலைவராக 32 வயதுடைய சந்தேக நபர் செயற்பட்டு வந்துள்ளமையுடன் கல்முனை புறநகர் பகுதியில் ஆசிரியர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து இத் திருட்டு குழுவை வழிநடத்தியுள்ளார். மற்றைய சந்தேக நபர் கல்முனை மாநகரில் கைத்தொலைபேசி கடையை நடத்தி வருபவராவார். இவர் 39 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் குறித்த கைத்தொலைபேசி திருட்டு கும்பலால் களவாடப்பட்டு வருகின்ற கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்து விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இது தவிர குறித்த சந்தேக நபர்கள் பொது இடங்கள் கல்முனை பிரதான பஸ் நிலையம் மற்றும் பஸ்களில் பயணம் செய்பவர்களையும் இலக்கு வைத்து இத்திருட்டை சாதுரியமாக மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன் மண்டூர், நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்தவர்கள் இக்கைத்தொலைபேசி திருட்டினால் தமது பெறுமதியான கைத்தொலைபேசிகளை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பொலிஸாரால் தற்போது கைப்பற்றப்பட்டுள்ள தொலைபேசிகளின் பெறுமதி ரூபா 5 லட்சத்துக்கும் அதிக பெறுமதியானவை என்பதுடன் சில கைத்தொலைபேசிகளின் உரிமையாளர்கள் தத்தமது தொலைபேசிகளை இனங்கண்டு வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் கடந்த காலங்களில் கைத்தொலைபேசிகளை தொலைத்திருந்தால் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் கேட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.