டெங்கு உணர்குறிகள் வெற்றிகரமான சிகிச்சை தொடர்பில் பயிற்சிப்பட்டறை

நூருல் ஹூதா உமர்

கல்முனைப் பிராந்தியத்தில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரிக்கலாம் என்ற கள ஆய்வு அறிக்கைகளுக்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ சீ.எம் பசால் அவர்களினால் டெங்கு உணர்குறிகள் மற்றும் வெற்றிகரமான சிகிச்சை தொடர்பில் விசேட பயிற்சிப்பட்டறையொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ. அப்துல் வாஜித் தனது தலைமையுரையில்; டெங்கு ஒழிப்பின் அவசியம் பற்றியும் இந்நோயை முன்னரை விட அதிகம் எதிர்த்து போராட வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிகழ்வில் தொற்று நோய்த் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.எம்.எஸ். இர்சாத், சுற்றுச்சூழல் மற்றும் தொழில் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ். எம். பௌசாத், பொது சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எம். ஹில்மி ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விசேட பயிற்சி நெறியில் விசேட வளவாளராக கலந்து கொண்ட பொது வைத்திய நிபுணர் டாக்டர் எம். யூசுப் டெங்கு தொடர்பில் விரிவான விளக்கங்களை வழங்கியிருந்ததுடன் வைத்தியர்களின் கேள்விகளுக்கும் பதில்களை வழங்கி வைத்தார். மேலும் நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ சீ.எம் பசால் டெங்கு தொடர்பிலான புள்ளி விவரங்களையும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதிலுள்ள சவால்கள் மற்றும் தடைகள் பற்றியும் விரிவாக விளக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.