ஜனாதிபதி, பாதுகாப்பு தரப்புகளுக்கு முஸ்லிம் எம்.பிக்கள் நன்றி பாராட்டு!

 

நூருல் ஹூதா உமர்

இஸ்லாமிய அமைப்புகள் மீது போடப்பட்ட தடை எமது அரசால் உத்தியோகபூர்வமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும், தடையை நீக்க நடவடிக்கை முன்னெடுத்த ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு துறைக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜங்க அமைச்சருமான சட்டதரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஸாக் ரஹ்மான் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினருடனான எங்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் தொடர் முயற்சியின் பயனாகத் தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டுள்ளமை வரவேற்கக் கூடிய விடயமாக உள்ளதுடன் இறைவனுக்கே புகழனைத்தும். இந்தத் தடை நீக்கம் செய்ய முன்வந்து நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு ஆலோசகர் முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க அடங்களாக பாதுகாப்பு படைகளின் பிரதானிகள், பாதுகாப்புப்படை அதிகாரிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

நாங்கள் சந்தித்து பேசியவுடன் இத்தடையை நீக்க ஜனாதிபதி முன்வந்ததுடன் பாதுகாப்பு தரப்பின் மேலதிக ஆராய்வுகள், நடவடிக்கைகள் காரணமாக சிறிய கால தாமதம் ஏற்பட்டிருந்தாலும் கூட இத்தடையை நீக்கியமை மகிழ்ச்சியளிக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

வர்த்தமானியின் உப அட்டவணையில் குறிப்பிடப்படப்பட்டிருந்த ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத், ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத், அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத் அன்ஸாரி சுன்னதில் முஹம்மதியா ஆகிய அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டுள்ள விடயம் வெளிநாட்டு புலமைப்பரிசிலை பெரும் இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்துக்கும், மார்க்க விடயங்களுக்கும், நாட்டின் பொருளாதார சமூக விடயங்களுக்கு நன்மையாக அமையும் என்று நம்புகிறோம்.

மேலும் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அமைப்புக்கள் நாட்டினதும், முஸ்லிம் சமூகத்தினதும் மேம்பாட்டு விடயங்களில் கவனம் செலுத்த எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். – என்று தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.