மீனவர் விவகாரத்தை அரசியலாக்கி நிறைய பேர் குளிர்காய்கின்றார்கள்! ஜீவன் தொண்டமான் பேட்டி
மீனவர் விவகாரத்தை அரசியலாக்கி நிறையபேர் குளிர்காய்கிறார்கள் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளார்.
நேர்காணலில் ஜீவன் தொண்டமான் கூறியவை வருமாறு –
மலையகத் தமிழர் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் பொறுப்பு உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினிடம் கல்வித்துறை சார்ந்து 4 கோரிக்கைகள் முன்வைத்துள்ளோம். 13 ஆவது சட்டத்திருத்தம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசியுள்ளோம். இன ரீதியான விவகாரங்கள் குறித்தும் பேசியுள்ளோம். இது தமிழ்நாடு – இலங்கை இடையே புதிய உறவை ஏற்படுத்தும். மீன்பிடி தொழில் மீனவர்களுக்கு வாழ்வாதாரம். மீனவர் விவகாரத்தை அரசியலாக்கி நிறையபேர் குளிர்காய்கிறார்கள். இரண்டு நாடுகளும் பேசினால் தீர்வு காணலாம். இந்த விவகாரம் குறித்து இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும்.
13 ஆவது திருத்தம் தொடர்பாக சிங்களவர்கள் மத்தியில் தவறான அபிப்ராயம் உள்ளது. 13 ஆவது சட்ட திருத்தம் சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லீம்களுக்குமானது. இலங்கையில் போராட்டங்கள் நடத்துவது சகஜம். ஜனநாயகத்துக்கு ரணில் விக்ரமசிங்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார். மலையகத் தமிழர்கள் ஒவ்வொரு நாளும் போராடி வருகிறார்கள். இலங்கை வடக்கு – கிழக்கு தொடர்பாக செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள், தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் அகதிகள் தொடர்பாக செயல் திட்டம் தயாராகி வருகிறது. அரசியல் தீர்வுடன், அபிவிருத்தியும் முக்கியம். இலங்கையில் நடைபெறும் விடயங்கள் தொடர்பாக இந்திய மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும். இலங்கைக்கு வாங்க…அழகான நாடு, நேரடியாக வந்து பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை