அரச மரத்தைக் கண்டாலே அஞ்சுகின்ற நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்   ஜோன் ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவிப்பு

சட்டவிரோதமான முறையில் அடாத்தாக பறாளை முருகமூர்த்தி ஆலய தலவிருட்சமான அரசமரத்தை பௌத்த தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதி செயற்பாட்டாளருமான அருள்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு –

தமிழ்மக்களின் பண்டைக்கால வாழ்வியல் தொட்டு இயற்கை வழிபாட்டோடும்  குறிப்பாக சைவசமய நம்பிக்கை வழிபாடுகளோடு தல விருட்சங்களாக வணங்கி மதிப்பளிக்கப்பட்டு இரண்டறக் கலந்திருந்த அரசமரத்தை இன்று தமிழர்கள் அல்லது  தமிழ் சைவர்கள் கண்டாலே அஞ்சுகின்ற நிலையை இன்று பௌத்த சிங்கள பேரினவாதமும் வடக்கு, கிழக்குத் தமிழருக்குத் தொல்லை தரும் அமைப்பாக மாறியுள்ள அதன் தொல்லியல் திணைக்களமும் உருவாக்கி உள்ளன.

ஏற்கனவே சங்கமித்தை வந்து இறங்கிய இடம் என குறிப்பிடப்பட்டு மாதகல் சம்பில்துறையில் பல பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை கடற்படையின் உதவியுடன் அடாத்தாக சுவீகரித்து பாரிய வழிபாட்டிடம் தங்குமிடங்களை அமைத்துள்ளார்கள் தற்போது இது போதாது என்று சங்கமித்தையின் பேரால் சுழிபுரம் பறாளாய் முருகமூர்த்தி ஆலய பழம்பெரும் தலவிருட்சமான அரச மரத்தை கோவில் நிர்வாகத்திற்கோ உரிய பிரதேச அரசநிர்வாக அலகுகளிற்கோ தெரிவிக்காது  பொதுமக்களின் கருத்துக்களை பெறாமலும் உரிய ஆய்வுகள் இன்றியும் அவசர அவசரமாக பௌத்த தொல்லியல் சின்னமாக வர்த்தமானியில் பிரசுரித்து இருக்கின்றமை என்பது  சைவ மதத்தின் பாரம்பரிய வழிபாட்டிடம் மீதான சமய ஒடுக்குமுறை என்பதோடு பௌத்தமத ஆக்கிரமிப்பு ஆகவே இருக்கிறது.

கலாசார அமைச்சினதும் தொல்லியல் திணைக்களத்தினதும்  இந்த அடாவடி  செயல் கடுமையான கண்டனத்திற்குரியது உடனடியாக இந்த வர்த்தமானி பிரசுரம் வாபஸ் பெறப்படவேண்டும்.

தமிழ் மக்களின் மதவழிபாட்டு சுதந்திரம் தொல்லியலின் பேரால் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுகின்ற குருந்தூர் மலை முதல் வெடுக்குநாறி இன்று பறளாய் எனத் தொடர்கின்ற கதைகள் நிறுத்தப்படவேண்டும் இதற்காக கட்சி பேதங்கள் இன்றி தமிழ் அரசியல்தலைமைகள் ஒன்றுபட்டு வெகுசன போராட்டங்களை ஒழுங்கமைப்பதோடு நாடாளுமன்றத்திலும் இதனை வெளிப்படுத்தி குரல்கொடுப்பதோடு இராசதந்திர மட்டங்களிலும் இதற்காக செயற்படவேண்டும் என தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.