நிந்தவூர் பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோகம்: ஆசிரியருக்கு விளக்க மறியல், அதிபருக்கு பிணை

!

பாறுக் ஷிஹான்

அரச பாடசாலை ஒன்றில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸில் சரணடைந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார் .

மேற்படி வழக்கு திங்கட்கிழமை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ரி. கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பிரதான சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியருக்கு 14 நாள்கள் விளக்கமறியலும் இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பாடசாலை அதிபரை தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக செயற்பட்டு வந்துள்ள சந்தேக நபர் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி விளையாட்டு அறையில் வைத்து பாலியல் ரீதியாக மாணவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்த முயற்சித்தார் எனத் தெரிவித்து ஓகஸ்ட் 2 ஆம் திகதி அம்மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தலைமைறைவாகி இருந்த சந்தேக நபரான ஆசிரியர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்த நிலையில் சந்தேக நபரை நிந்தவூர் பொலிஸார் திங்கட்கிழமை சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட மாணவன் அதிபரிடம் முறையிட்டுள்ளதுடன் இரு வாரங்கள் கழிந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ஊடகங்களுக்கு பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.